மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனது ட்விட்டர் பக்கத்தில் உடல்திறன் மேம்பாடு குறித்த சேலஞ்ச் ஒன்றை வெளியிட்டார். அதில் சாய்னா நேவால், விராத் கோலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரையும் அவர் இந்த சேலஞ்சுக்கு அழைத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டு அதில் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை டேக் செய்திருந்தார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த பிரதமர் மோடி, சேலஞ்சை ஏற்றுக்கொள்கிறேன். கூடியவிரைவில் என் பிட்னஸ் வீடியோவை வெளியிடுகிறேன் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ‘விராத் கோலியின் பிட்னஸ் சேலஞ்சுக்கு நீங்கள் பதிலளித்திருப்பது குறித்து எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், நான் உங்களுக்கு சேலஞ்ச் விடுக்கிறேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம், தலித் மற்றும் சிறுபாண்மையினருக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தம் போன்ற விஷயங்கள் தொடர்பான என் சவால்களை பிரதமர் மோடி அவர்களே ஏற்றுக்கொள்வீர்களா?’ என தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.