ADVERTISEMENT

மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

07:56 AM Feb 26, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தை பரபரக்க வைத்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லை. வெற்றி என்பதை மட்டுமே இலக்காக கொண்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியிருந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

நேற்று, ஈரோடு கிழக்கு பகுதிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்குப் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். தேமுதிக சார்பில் அக்கட்சியின் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் விதிப்படி நேற்று மாலையுடன் பிரச்சார நேரம் முடிந்தது. வெளியூரைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதால் ஈரோடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தொகுதியில் இருந்து வெளியேறாதவர்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் தற்போதுவரை மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக 15 காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து தங்கும் விடுதிகள் திருமண மண்டபங்கள், கட்சியினருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தலும் செய்யப்பட்டது.

மேலும், நாளை நடக்கும் வாக்குப்பதிவிற்கு உண்டான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்யப்படுவது போன்ற தேர்தல் விதிகளை மீறி செயல்படுவர்களை தடுக்க கூடுதலாக நான்கு பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவையொட்டி ஈரோடு கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் வரை உள்ள 50 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பிப்ரவரி 25, 26, 27 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஏற்பட்ட பரபரப்பு மார்ச் 2 வரை நீடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT