மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ஓ.பி.சி. பிரிவினருக்கு மருத்துவப் படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்க உள்ளதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மேலும் மருத்துவ இடங்களில் 69 சதவீதம் என்ற அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற திமுக போராடும். திமுகவின் நீண்ட போராட்டத்தால் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சமூக நீதி என்ற லட்சியத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அயர்ந்து விடாமல் திமுக தொடர்ந்து போராடும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாமகவின் ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், மருத்துவப் படிப்பு: 27% ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் எனக் கொண்டாடுவது மிகப்பெரிய மோசடி: மத்திய அரசின் நிபந்தனைகள் அநீதியானவை என்று குறிப்பிட்டுள்ளார்.