இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,091- லிருந்து 3,54,065 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900- லிருந்து 11,903 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013- லிருந்து 1,86,935 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 1,55,178 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,13,445 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் 48,019, டெல்லியில் 44,688, குஜராத்தில் 24,577, ராஜஸ்தானில் 13,216, மத்திய பிரதேசத்தில் 11,083, உத்தரப்பிரதேசத்தில் 14,091, ஆந்திராவில் 6,841, தெலங்கானாவில் 5,406, கர்நாடகாவில் 7,530, கேரளாவில் 2,622, புதுச்சேரியில் 216 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா பரவல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டும், மக்களிடம் விழிப்புணர்வு வரவில்லை. அதனால் அபராதத்தை ரூ.1,000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று தோன்றுகிறது. கரோனா நோய்ப்பரவல் குறித்து எதுவும் தெரியாமல், எல்லாம் தெரிந்தவர்களைப் போலக் காட்டிக் கொள்வதற்காக சமூக ஊடகங்களில் வதந்திகளையும், பீதிகளையும் பரப்புபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் எல்லை மீறும் போது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சென்னை ராஜிவ்காந்தி பொதுமருத்துவமனையில் பணியாற்றி கரோனா தாக்கி உயிரிழந்த செவிலியர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. தங்கலட்சுமி என்ற அந்தச் செவிலித்தாய் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்தவர். நோய்ப் பாதித்தும் சேவையைத் தொடர்ந்து உயிர்த்தியாகம் செய்த அவருக்கு வீரவணக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.