ADVERTISEMENT

ஒ.பி.எஸ்.ஸின் சொந்த தொகுதியில் அதிமுகவினர் அதிருப்தி!

03:57 PM Mar 18, 2019 | sakthivel.m

ADVERTISEMENT

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியும் இடைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கதிர்காமு டிடிவி அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் அடிப்படையில் தான் இந்த பெரியகுளம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. மீண்டும் டிடிவி அணி சார்பாக கதிர்காமு களமிறங்கியிருக்கிறார்.

ADVERTISEMENT

திமுக சார்பில் தேனி ராயப்பன் பட்டியை சேர்ந்த பொறியாளர் அணி மாவட்ட இணைச் செயலாளரான சரவணக்குமார் களமிறக்கி இருக்கிறார். சரவணகுமார் கட்சிக்காரர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமானவர். அதோடு கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லாசர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு கணிசமாக ஓட்டு உள்ளது. அது போல் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கும் ஒரு கணிசமான ஓட்டு வங்கியும் தொகுதியில் இருந்து வருவதால், கட்சி பலத்துடன் கூட்டணி கட்சிகளின் பலமும் சரவணக்குமாருக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கி இருக்கிறார்.


அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள முருகன் பெரியகுளம் தென்கரை அருகே உள்ள கல்லுப்பட்டி சேர்ந்தவர். சென்னையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோசியல் வெல்பர்ஆபீஸராக இருக்கிறார். கட்சிக்காரர்களுக்கும் அறிமுகம் இல்லாதவர். கட்சி பொறுப்பிலும் இல்லை. சாதாரண உறுப்பினராக அரசு பணியில் இருக்கும் முருகன், ஒபிஎஸ் ஆதரவாளர் அதோடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரையின் பேரில் ஓபிஎஸ் சீட் கொடுத்து இருக்கிறார் என்ற பேச்சு கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. கட்சிக்காக உழைத்தவர்கள் இருந்தும் கூட தொகுதி மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகமில்லாத புதுவேட்பாளரை ஓபிஎஸ் களத்தில் இறக்கி இருப்பதைக் கண்டு ஓபிஎஸ் மேல் ஒட்டுமொத்த ர.ர.க்களும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

அதுபோல் கல்லுப்பட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ஓபிஎஸ்-சின் தம்பி ஓ. ராஜா இருந்து வருகிறார். ஓபிஎஸ் குடும்பத்தினர் மீது ஒரு அதிருப்தியும் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. அதை சரிகட்டுவதற்காகவே தான் ஒபிஎஸ் தொகுதிக்கே அறிமுகம் இல்லாத கள்ளுப்பட்டியை சேர்ந்த முருகனுக்கு சீட் கொடுத்து களம் இறக்கி இருக்கிறார் என்ற பேச்சும் ர.ர.க்கள் மத்தியில் பரவலாக எதிரொலித்து வருகிறது. இப்படி கட்சிக்காரர்கள் மற்றும் சமூக ரீதியாக உள்ள மக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் மேல் ஒரு அதிருப்தி இருந்து வருவது வரக்கூடிய தேர்தல் களத்திலும் விஸ்பரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளது/ அதன் மூலம் ஓபிஎஸ் செல்வாக்கும் சரியப்போகிறது என்ற பேச்சு அந்த பெரும்பான்மை சமூக மக்கள் மத்தியிலும் பேசப்பட்டும் வருகிறது!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT