ADVERTISEMENT

எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

02:32 PM Jul 03, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடத்தப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லா பகுதியில் தொடர்ந்து கனமழை பொழிவதால் எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13 மற்றும் 14 ஆம் ஆகிய இரு தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் ஜூலை 13,14 ஆம் தேதிகளில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கே.சி.வேணுகோபால் ட்விட்டரில், “பாட்னாவில் மாபெரும் வெற்றி பெற்ற அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, அடுத்த கூட்டத்தை 2023 ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் பெங்களூருவில் நடத்துவோம். பாசிச மற்றும் ஜனநாயக விரோத சக்திகளை தோற்கடித்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு துணிச்சலான பார்வையை முன்வைப்பதற்கான எங்கள் அசைக்க முடியாத கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT