ADVERTISEMENT

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி!

09:17 AM Jul 23, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாகச் சென்னை புழல் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கடந்த 2019 நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் பரோல் வழங்க முடியும் எனத் தெரிவித்தனர்.


அதற்கு, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது, இது போன்ற சந்தர்ப்பங்களில் பரோல் வழங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்கத் தேவையில்லை என, ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான், அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனத் தெரிவித்து, 2 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தார். மேலும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க, தமிழக அரசுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி, ஜூலை 29-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT