கதிர் ஆனந்த் வெற்றிக்காக அவரது மனைவி சங்கீதா, பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார். திமுக கலர் துண்டை தனது கழுத்தில் போட்டுகொண்டு குட்டியானை என்கிற லோடு ஆட்டோவில் ஏறி கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்ய துவங்கியுள்ளார்.
குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளின் எல்லையோரம் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகள் உள்ளன. அதோடு கர்நாடகாவின் லிங்காயத்துக்குள், ஆந்திராவின் ரெட்டிகள், நாயுடு, ராஜா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த தொகுதிகளில் கணிசமாக வாழ்கின்றனர். அவர்களிடம் சென்று பிரச்சாரம் செய்யும் கதிர் ஆனந்த் மனைவி, தனது கணவருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என தெலுங்கு, கன்னடத்தில் பேசி வாக்கு கேட்கிறார். இது அப்பகுதி மக்களை ஈர்த்துள்ளது.
மேக்கப் இல்லாமல், மிக எளிமையாக, சாதாரண குடும்ப பெண்ணாக களத்தில் இறங்கிய கதிர் ஆனந்த் மனைவியை பார்த்து திமுக நிர்வாகிகளே ஆச்சர்யப்படுகின்றனர். அவரது மாமனார் பல முறை எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டபோதும், குடும்ப நிர்வாகம், தொழில் நிர்வாகத்தை மட்டும்மே கவனித்து வந்தவர், ஆளும்கட்சியான அதிமுக, தனது கணவருக்கு தரும் நெருக்கடியால் களத்துக்கு வந்துள்ளார். அவரின் பிரச்சாரம் பெரியதாக எடுப்பட்டுள்ளது.
ஆளும்கட்சி திட்டமிட்டு கதிர் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் ஏ.சி.சண்முகத்தை எதிர்க்கும் திமுக வேட்பாளராக சங்கீதாவை நிறுத்தினால், ஏ.சி.சண்முகத்திற்கு பெரும் சவாலை தருவார் என்கிறார்கள் திமுகவினர். அந்தளவுக்கு அவரின் பேச்சு களத்தை கலக்கிவருகிறது.
இதனை முறியடிக்க சின்னத்திரை நடிகர் - நடிகைகளை அதிகளவில் களத்தில் இறக்கிவிட்டுள்ளார் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம்.