ADVERTISEMENT

மக்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்:  கமல்ஹாசன் 

08:51 AM Apr 04, 2018 | rajavel


ADVERTISEMENT


மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி புறப்பட்டார்.

ADVERTISEMENT

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் கமல்ஹாசனுடன் ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார்.

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?.

பதில்:- 144 ஆண்டுக்கு பிறகு மறுபடியும் சொல்வதை கேட்க வேண்டும் என்பது ஒரு சோகமான ஒரு சூழல். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இருவருக்கும் உள்ள உரிமைகள் இருக்கின்றன. ஆனால், அதை சொல்வதற்கு பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். தண்ணீர் கொடுங்கள். இவ்வளவு கொடுங்கள் என்று கேட்ட போராட்டம் இப்போது ஆணையமாவது அமையுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டது. அதற்கு காரணம் அசட்டையாக இருந்துவிட்டது தான்.

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?.

பதில்:- அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் தட்டிக்கழிக்கிற மாதிரியான கோபமும் எழுகிறது. அமைக்கவே மாட்டார்கள் என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுதான் விதி என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. விதியை மதியாலோ, நீதியாலோ வென்றே ஆக வேண்டும்.

கேள்வி:- இந்த இடைப்பட்ட காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:- என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அப்படி எல்லாம் போகவிடக்கூடாது என்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து, வேண்டுகோள். மத்திய அரசும், மாநில அரசும் தயவு செய்து மக்களை அப்படி கொதித்து எழவைத்துவிடாதீர்கள். உங்களின் அரசியல் நோக்கம் எதுவாக இருந்தாலும் மக்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எதிர்கட்சிகளோ, மாணவர் அமைப்புகளோ போராட்டம் நடத்த சென்றால் அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் செயல் இது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி:- எல்லா கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராடுகிறார்கள். நீங்களும், பா.ஜ.க.வும் மட்டும் போராடவில்லை? நீங்கள் எப்போது போராடுவீர்கள்? அதற்கான திட்டம் இருக்கிறதா?

பதில்:- மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுவது தான் போராட்டம். ஆனால் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் வாழ்க்கையே நாசமாக போகிவிடுமே என்று இடைஞ்சலை பற்றி கவலைப்படாமல் அராஜகம் விளைவிக்கக்கூடாது. அரசியல் சாசனத்தின்படி நம் கருத்துகளை தெளிவாக சொல்லியும், அழுத்தம் கொடுக்க வசதிகள் இருக்கின்றன. அவைகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வெறும் வீண் அரசியல் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. வாய்ச்சவுடால் அரசியல் போதாது. என்னுடைய போராட்டம் மக்களின் எதார்த்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதற்கு காரணம் யாரோ அவர்களை பாதிக்கும் போராட்டமாக இருக்கும். ஒத்துழையாமை இயக்கம் போல கூட இருக்கலாம்.

கேள்வி:- திருச்சி பொதுக்கூட்டத்தின் எதை மையமாக வைத்து பேசப்போகிறீர்கள்?

பதில்:- காவிரி மேலாண்மை வாரியத்தை பற்றியும், அதற்கான தீர்வை நோக்கி நகர்வது குறித்தும் பேச திட்டமிட்டு இருக்கிறேன்.

கேள்வி:- அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, மக்கள் மத்தியில் உங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

பதில்:- அன்பான வரவேற்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. கண்களை பார்த்து நான் பேசியதில் அது நன்றாக தெரிகிறது. தமிழகத்துக்கான நம்பிக்கையாக அது தெரிகிறது. அது என்னை பார்த்து வரும் நம்பிக்கையா? என்பது இனிமேல் தான் தெரியவரும். இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT