அதிமுகவினர் வாக்களர்களுக்கு தலா 4 ஆயிரம் வீதம் பணவிநியோகம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் மதுரை பென்மேனி அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் அதிமுகவினர் சிலர் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர்.
இதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சாக்கிலிபட்டி கிராமத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவிற்கு சொந்தமான தென்னந்தோப்பில் 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கட்டுகட்டாக பணத்துடன் பதுங்கியிருப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் வந்த நிலையில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் அதிரடியாக சென்றபோது அதிமுகவினர் பணத்துடன் தப்பி ஓடி விட்டனர்.