ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம்; முதல்வரின் முக்கிய அறிவுறுத்தல்கள்

02:57 PM Feb 04, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் செயலாளர், பொதுத்துறை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர், “நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி வெளியிட்டிருக்கிறோம். அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம். அவை எல்லாம் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற வகையில் கண்காணித்து அதை நிறைவேற்றித் தருவதற்கான முழு பணியிலும் நீங்கள் ஈடுபட வேண்டும்.

இப்போது புதிதாக இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டு அந்தப் பணி மிகச் சிறப்பான வகையில் நான் திருப்தி அடையக்கூடிய வகையில் அந்தப் பணிகள் நடந்திருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய நீங்கள் மாவட்டத்தில் பொறுப்பேற்றவுடன் என்னென்ன பணி நடைபெறாமல் இருக்கிறது? என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது? எந்தெந்த பணிகள் இன்னும் தொடங்க இயலாத நிலையில் இருக்கிறது? அதற்கு என்னென்ன இடையூறுகள் இருக்கின்றன? நீதிமன்றங்களில் என்னென்ன வழக்கு இருக்கிறது? என்பதைப் பற்றியெல்லாம் கலந்தாய்வு நடத்தி விரைவாக அந்தப் பணிகளை நிறைவேற்றக்கூடிய காரியத்தில் ஈடுபட வேண்டும். மிக விரைவில் நீங்கள் பொறுப்பேற்கக் கூடிய மாவட்டத்திற்கு நாங்கள் ஆய்விற்கு வருகிறபோது அது உங்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது; அது உங்களால் சரிசெய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை நீங்கள் சொல்லக்கூடிய அளவிற்கு உங்களுடைய கடமையை நிறைவேற்றித் தரவேண்டும்.

ஏதோ உங்களிடத்திலே பணிகளை விட்டுவிட்டு நாங்கள் அமைதியாக இருந்துவிடுவோம் என்று நீங்கள் எண்ண வேண்டாம். உங்களிடத்தில் உள்ள பணிகளில் என்னென்ன பணிகளை முடித்திருக்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்யப்போகிறார். அதேபோல முதலமைச்சராக இருக்கக்கூடிய நானும் ஆய்வு செய்யப்போகிறேன். விரைவில், மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்போகிறோம். அப்படி தாக்கல் செய்யப்படுகிற நேரத்தில், என்னென்ன புதிய திட்டங்களை நாம் அறிவிக்க இருக்கிறோம். ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய திட்டங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அந்த நிதிநிலை அறிக்கையில் பேசப்படக்கூடிய ஒரு சூழ்நிலை வரும். அதையும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கும் நீங்கள் தகுந்த பதிலை நம்முடைய அரசுக்குத் தொடர்ந்து வழங்கிட வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள நீங்கள் சிறப்பான முறையில் கடமையாற்றி இந்த அரசுக்கு ஒரு நற்பெயரைத் தேடித் தாருங்கள்” எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT