ADVERTISEMENT

டெல்டாவில் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் -மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ!

12:13 AM Sep 22, 2020 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் காணொளி வழி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 18.09.2020 அன்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது, "இங்கு ONGC, CPCL போன்ற மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் நமது மண்ணை சேர்ந்தவர்கள் குறைவானவர்களே பணிபுரிகிறார்கள். அந்த நிறுவங்கள் நமது இயற்கை வளங்களை வேட்டையாட முயலும் போது எதிர்ப்புகளைச் சந்திக்கின்றன. மீத்தேன் - ஹைட்ரோகார்பன் போன்றவற்றை எடுக்க பெருநிறுவனங்கள் முயலும்போதும் மக்கள் எதிர்க்கிறார்கள். நமது நிலம், நீர், காற்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். அந்த வகையில் நமது இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு இல்லாத தொழில்களை நாம் உருவாக்க வேண்டும். மதிப்புக் கூட்டு வணிகங்களை ஊக்குவிக்க வேண்டும். நீண்ட கடல் வளம் உள்ளது. அதையும் பயன்படுத்த வேண்டும்.

நான் நாகைக்கு மருத்துவக் கல்லூரிக்கு குரல் கொடுத்தேன். அது கிடைத்திருக்கிறது. நாகைக்கு சட்டக்கல்லூரி, நாகூருக்கு மகளிர் கலைக் கல்லூரி ஆகியவற்றை அரசிடம் கேட்டு வருகிறேன். இதுவும் வளர்சிக்குத் துணை நிற்கும். ஆயக்காரன்புலத்தில் ஜவுளி பூங்காவை முதல்வர் அறிவித்துள்ளார். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் 21-ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை தரும். ஒரு குட்டி திருப்பூர் உருவாக உள்ளது. வேதாரணியத்தில் துளசியாப்பட்டினம் அருகே வண்டு வாஞ்சேரியில் உணவு பூங்கா அமைய உள்ளது. இது உணவு சார்ந்த தொழில் உற்பத்தியைப் பெருக்கி, வேலை வாய்ப்புகளையும் தரும்.

இவை டெல்டா மாவட்டங்களுக்கு பயன் தருபவை. டெல்டா என்பது தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்குப் பகுதிகள், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகியன அடங்கியவை. முழு டெல்டா மாவட்டங்களுக்கும் பயன்தரும் வகையில், நாகை துறைமுகத்தை தனியார் பங்கேற்போடு மேம்படுத்த முதல்வரிடம் பேசியுள்ளேன். அந்த முயற்சி வெற்றி பெறுமேயானால் டெல்டா மாவட்டங்கள் தொழில் மயமாகும். ஏற்றுமதி - இறக்குமதி பெருகும். நேரடி வேலைவாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும். நில விற்பனை, புதிய கட்டிடங்கள் என ரியல் எஸ்டேட் தொழிலும் பெருகும்.

அது போல் நாகைக்கும், இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசிடம் பேச வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதன் மூலம் சுற்றுலாத் துறை வளர்ச்சி பெற்று, போக்குவரத்து பெருகும். இந்தக் கனவுகள் நிறைவேற தொடர்ந்து உழைக்க வேண்டியுள்ளது. நீங்கள் உறங்கும் போது வருவதல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு என்றார் அப்துல் கலாம். கனவுகள் மெய்ப்பட வேண்டி உழைப்போம். நமது டெல்டாவில் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT