ADVERTISEMENT

“அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கா?; திமுவை சீண்டிப் பார்க்க வேண்டாம்” - வீடியோ வெளியிட்ட மு.க. ஸ்டாலின்

01:07 PM Jun 15, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான திமுகவின் மனுக்கள் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு விசாரணைக்கு வரும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''வழக்கமாக நான் 'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சி மூலமாக உங்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வருகிறேன். ஆனால் இப்பொழுது இந்த வீடியோ மூலமாக இன்னொரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாகக் கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்று யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை. பத்து ஆண்டுகளுக்கும் முன்னாடி உள்ள பழைய புகாரை வைத்து 18 மணி நேரம் அடைத்து வைத்து மன அழுத்தம் கொடுத்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இருதய நோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?

செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு இருக்கும் என்றால் அவரை அழைத்து விசாரணை நடத்தியதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியும் அளவிற்கு அவர் சாதாரணமானவர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ. அதுவும் ஐந்து முறை எம்எல்ஏவாக இருக்கிறார். இரண்டாவது முறையாக மினிஸ்டராக இருக்கிறார். நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறவர். அப்படிப்பட்டவரை ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபொழுது முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும் அது தொடர்பாக விளக்கம் அளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்கு அப்புறமும் 18 மணி நேரமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். யாரையும் சந்திக்க அனுமதியில்லை. இறுதியாக அவருக்கு உடல் நலம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இதய வலி அதிகமான பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அதிலேயும் அலட்சியம் காட்டியிருந்தார்கள் என்றால் அது அவருடைய உயிருக்கு ஆபத்தாக இருக்கும். இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன எமர்ஜென்சி. அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கா? அப்படித்தான் இருக்கு அமலாக்கத்துறையின் நடவடிக்கை. சிம்பிளா சொல்ல வேண்டும் என்றால் பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களுடைய அரசியலை செய்ய நினைக்கிறது. மக்களை சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜகவை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால் தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜகவுடைய அரசியலே மக்கள் விரோத அரசியல் தான். கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாகத் தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜகவுடைய பாணி.

அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி. இந்த ஜனநாயக விரோதச் செயலைத்தான் இந்தியா முழுக்க ஃபாலோ பண்ணுகிறார்கள். ஒரே ஒரு ஸ்கிரிப்ட் தான் வேற வேற மாநிலங்களில் டப்பிங் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் பற்றிப் பேச பம்மாத்து பழனிசாமிக்கு அருகதையில்லை. திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT