ADVERTISEMENT

நெருங்கும் தேர்தல்; நெருக்கும் சச்சின் பைலட்; கலக்கத்தில் காங்கிரஸ்

10:49 AM Jun 07, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றதில் இருந்தே அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே உட்கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக மோதல் தொடர்ந்து வருகிறது.

அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் தலையீட்டையடுத்து துணை முதல்வர் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் இணைந்து செயல்பட காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது. இதையடுத்து ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்தனர். இருப்பினும், வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். இதனால் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகிய இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

மேலும், வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜெய்ப்பூர் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஊழல் மற்றும் தேர்வுத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் ஆகியவற்றுக்கு எதிராக அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூருக்கு கடந்த மே மாதம் 11 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை 5 நாள் நடைப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து சச்சின் பைலட் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் சச்சின் பைலட்டின் தந்தையும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட்டின் நினைவு தினம் வரும் ஜூன் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில் ராஜேஷ் பைலட்டின் நினைவு தினத்தை முன்னிட்டு சச்சின் பைலட் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் தனிக் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை சச்சின் பைலட் வெளியிடுவார் என்று தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT