ADVERTISEMENT

“எதிர்க்கட்சிகளின் வரிசையில் பிபிசி” - மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

07:28 PM Feb 14, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான குஜராத் அரசு திட்டமிட்டே இந்த கலவரத்தை நடத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடிப் பொறுப்பு என்றும், இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. 'இந்தியா: மோடிக்கான கேள்வி' (India: The Modi Question) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதை வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சனம் செய்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிடத் தடை விதித்தது. இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். மேலும், அங்கு ஊழியர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படத்தை வெளியிட்டதன் காரணமாகத்தான் இந்த சோதனை நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பின.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்செயலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியதாவது, “மோடி அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசியல் ஆயுதமாக விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. பழிவாங்கல் வரிசையில் தற்போது பிபிசி நிறுவனத்தை சேர்த்துள்ளது.

பாஜக ஆட்சியில் மதிப்புமிக்க சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை முற்றிலும் சுதந்திரத்தை இழந்துள்ளது. மேலும், பாஜக அரசு இந்திய ஜனநாயகத்தையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் அழித்து வருகிறது. மக்கள் அளித்த அதிகாரத்தை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயல்களை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT