Skip to main content

“இது ஒன்றும் அச்சுறுத்தலுக்கானது இல்லை” - திமுக எம்.பி. கனிமொழி

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

nn

 

நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பி இருந்தார். அப்பொழுது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின், “பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதை அனைத்து கட்சிகளும் ஒற்றை இலக்காகக் கொண்டுள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாநிலத்தில் எந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளதோ அந்த கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. இப்பொழுதுதான் எதிர்க்கட்சிகள் கூட்டணி கருவாகி இருக்கிறது. அது உருவாக இன்னும் சில மாதங்கள் ஆகும்” எனத் தெரிவித்தார்.

 

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நேற்று பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் நமது தமிழக முதல்வரும் கலந்து கொண்டார். மிக முக்கியமான ஒரு கூட்டம். ஒரே இடத்தில் ஒத்த கருத்தோடு வரக்கூடிய தேர்தலில் நாம் ஒருமித்தமாக சந்திக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் எல்லோரும் அணி திரண்டு நடத்திய அந்தக் கூட்டம் என்பது மிக முக்கியமான கூட்டம்.

 

இன்று நாட்டில் மிகப்பெரிய நம்பிக்கை தந்திருக்கிற கூட்டமாக அந்த கூட்டத்தை நாம் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு என்பது யாரையும் அச்சுறுத்துவதற்காகவும், பயமுறுத்துதற்காகவும் இல்லை. நிச்சயமாக மக்களுக்கு நம்பிக்கை தருகின்ற கூட்டம். இந்த நாட்டை எல்லோரும் இந்தியா என்று நினைத்து பார்க்கும் பொழுது நமக்கு எல்லோருக்குமான நாடாக இது இருக்க வேண்டும். எல்லாருக்குமான தேசமாக இருக்க வேண்டும். யாரையும் அச்சுறுத்தும் தேசமாக இந்த நாடு இருக்க வேண்டாம் என்பதுதான் நாம் அனைவரும் நினைக்கக் கூடிய, எதிர்பார்க்கக் கூடிய ஒன்று” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.