இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த்தையும், திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டினையும் ஆதரித்து நாங்குநேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறும். தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு பிரதமர் மோடி நிதி உதவியை வழங்கவில்லை. இரண்டு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. தமிழகத்தை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் மத்தியில் பிரதமராக வர வேண்டும். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்பதை விளக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது அவமானம் என்று வாக்காளர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் பிச்சை என்று ஏளனம் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மற்றொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதியாக சித்தரித்து பேசுகிறார். தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ஏதேனும் சிறப்பு திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்கிறாரா? இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை. இலங்கையை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் மீது அதிகளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோடி அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் என பல்வேறு 'ஒரே' திட்டங்களால் ஒருவர்தான் பயனடைகிறார். தினமும் காங்கிரஸ் தலைவர்களை எப்படியெல்லாம் வசைபாடலாம் என்பது தான் மோடியின் வேலை ஆகும்.