ADVERTISEMENT

செந்தில் பாலாஜி வழக்கு; இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதியின் உத்தரவு

06:00 PM Jun 14, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரி சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் மாற்று அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை முதல் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவரது இதய ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையில் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் காவேரி மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக உயர்நீதிமன்றத்தில் கொடுத்த முறையீடு குறித்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

செந்தில் பாலாஜியை காவலில் வைக்குமாறு அமலாக்கத்துறை கூறும்போது அதற்கு எதிராக வாதாட திமுக வழக்கறிஞர்களும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்து காவல் வைப்பது தொடர்பாக முடிவெடுக்க நீதிபதியே மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

வரும் 28 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் என சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். திமுக வழக்கறிஞர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க அனுமதி வேண்டும் எனவும் அவருக்கு உடனடியாக பெயில் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இருதரப்பு வாதங்களையும் கேட்பதற்காக இருதரப்பு வழக்கறிஞர்களையும் நீதிபதி நீதிமன்றத்திற்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை நிராகரிக்கக் கோரியும், அவரை உடனடியாக ஜாமினில் விடுவிக்கக் கோரியும், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்குமாறும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 மனுக்கள் மீதும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ திமுக தரப்பில் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். செந்தில் பாலாஜியை கைது செய்ததை நிராகரிக்கக் கோரி திமுக சார்பில் வாதம் வைக்கப்பட்டது. செந்தில் பாலாஜியை கைது செய்ததில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தற்போது செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜியை சந்திக்க குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களைக் கூட அனுமதிக்கவில்லை என்றும், திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதாகவும் திமுக தரப்பினர் வாதிட்டனர். 2013 ஆம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது தலைமைச் செயலகத்தில் வேறு அறையிலிருந்ததாகவும் தற்போது அமலாக்கத்துறை வேறு அறையில் சோதனை நடத்தி இருப்பதாகவும் திமுக தரப்பினர் வாதிட்டனர்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி கைது செய்யப்படுவதற்கு முன் உரிய நோட்டீஸ் வழங்கி இருக்க வேண்டும் என்றும் அவர் மீது புகார் கூறப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திமுக தரப்பு கூறியது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் தான் தண்டனை. அதற்காக அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் இளங்கோ தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார். செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணையில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஏ.ஆர்.எஸ்.சுந்தரேசன் வாதிட்டார். விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும் கைதுக்கு முன் தொலைபேசி மூலம் அவரையும் அவரது மனைவியையும் தொடர்பு கொண்டோம். ஆனால் இருவரும் தொலைபேசியையும் எடுக்கவில்லை. இமெயில் அனுப்பியும் பதில் இல்லை என்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நாங்கள் அனுப்பிய சம்மனையும் கைது மெமோவையும் செந்தில் பாலாஜி பெற மறுத்தார் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுவோம் எனத் தெரிந்தே மெமோவை செந்தில் பாலாஜி பெற மறுத்துவிட்டார். ரிமாண்ட் ஏற்கப்பட்டால் தான் ஜாமீன் கோரமுடியும். ரிமாண்டை நிராகரிக்குமாறு கோர முடியாது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்றும் இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை என்றும் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மேலும் நேற்றுவரை ஆரோக்கியமாக இருந்தவர் தற்போது உடல்நலக்குறைவு என்கிறார்” என அமலாக்கத்துறையினர் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டறிந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது. இடைக்கால ஜாமின் வழங்கக் கோரிய வழக்கின் தீர்ப்பு, செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனு உள்ளிட்ட மூன்று மனுக்கள் மீதும் நாளை உத்தரவு வழங்கப்பட இருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT