Skip to main content

போன் செய்தா எடுக்காதீங்க... எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு போட்ட எடப்பாடி!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி என்று விடாப்பிடியாக நிற்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நெருக்கடி ஒருபுறம், "எனக்கும் மத்திய அமைச்சர் பதவி வேண்டும்' என வைத்தியலிங்கமும் தம்பிதுரையும் தனித்தனியாக முரண்டுபிடிப்பது மறுபுறமென்றால்..., காலியாகும் மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவியை குறிவைக்கும் அ.தி.மு.க.வினர். போதாக்குறைக்கு அக்கிரிமென்ட்படி கேட்கும் பா.ம.க., ஆர்டர் போட்டு கேட்கும் பா.ஜ.க. என சுற்றிச் சுற்றி உரலைப்போல் இடிபடும் முதல்வர் எடப்பாடி எது வந்தாலும் வரட்டும் ஆனால் ஆட்சியை மட்டும் விட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். டெல்லி கவலையை விட இப்போது பெரிதும் எடப்பாடியை வாட்டுவது தி.மு.க.வின் "பாலாஜி ஆபரேசன்' தானாம்.

 

admk



நமது நக்கீரனில் "தி.மு.க. பேரத்தில் 30 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்' என விரிவாக எழுதியிருந்தோம் அதில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை உளவுத்துறை மூலம் எடப்பாடி ரகசியமாக கண்காணிப்பதையும் பட்டியல் போட்டுக் கூறியிருந்தோம், அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே வெளியிடும் ரகசிய தகவல்கள்தான் இது.

அது என்ன "பாலாஜி ஆபரேசன்?'

பாலாஜி ட்ரீட்மெண்ட்படி சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை என 10 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அந்த பாலாஜியிடம் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளார்கள்'' என ரகசிய திட்டத்தை உடைத்து நம்மிடம் பேசினார் கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர். அவரை தொடர்ந்து பேச வைத்தோம்...

 

 

dmk



அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த மூத்த தலைவர்களனான சு.முத்துச்சாமி, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். என பல பேர் இருந்தாலும் இப்போதைய அ.தி.மு.க. நிர்வாக அமைப்பின் பலம், பலவீனம் என்ன என்பதை தெரிந்ததோடு யாருக்கு என்னென்ன தேவைகள் என்பதை அவர்களின் ஜாதகத்தோடு லிஸ்ட் எடுத்து தூண்டில் போடமுடியும் என்றால் அது அரவக்குறிச்சியில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான்.

 

admk



அவர்தான் இப்போது தி.மு.க.வில் தொடர்பில்லாத ஒரு குழுவுடன் வெளிப்படையாக இறங்கியுள்ளார். இது மாநில உளவுத்துறைக்கு தெரிந்துவிட்டது அவர்கள் வைத்த பெயர்தான் "பாலாஜி ஆபரேசன்' என்பது. மேற்கு மற்றும் கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சின்னம்மா சசிகலா உத்திரவுப்படி எங்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்துள்ளார். ஏன் இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடிக்கும் பல பஸ் ரூட் கொடுத்துள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் பஸ் ரூட் பெற்றுள்ளோம். அந்த வகையில் செந்தில் பாலாஜியுடன் மிகநெருக்கமான தொடர்பு எங்களில் 95 சதவீதம் பேருக்கு உண்டு. இப்போது எங்க எம்.எல்.ஏ.க்கள் பலர் கேட்பது இந்த ஆட்சியுடன் எங்களின் அரசியல் வாழ்வு முடியக்கூடாது என்பதுதான்.


 

 

admk



சிலருக்கு அமைச்சர் ஆசை, சிலருக்கு கட்சியில் மா.செ. போன்று வெயிட்டான பதவி வேண்டும் என்பது. மேலும் சிலரை பொருளாதார ரீதியாக உயர்வை ஏற்படுத்துவது. இந்த மூன்றுக்குள்தான் எல்லோரின் மொத்த தேவையும் அடங்குகிறது. பாலாஜி ஆபரேசனில் இரண்டுசுற்று பேச்சு முடிந்துவிட்டது. அடுத்தது ஒரே சுற்றுதான். இதுவரை நாங்கள் கட்டியது பழைய வேட்டியாக மாறும். புதிய கரைபுடன் புதிய வேட்டி கட்டும் நிலை வரும்...'' என்ற அவர் ""சார் போன வாரம் கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து தொடர்ந்து போன் வந்தது. "பாலாஜி போன் செய்தா எடுக்காதீங்க... உங்கள் தேவைகள் நிறைவேறும்'னு சொன்னாங்க. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ரெண்டு நாளைக்கு ஒருமுறை போன் செய்து "ஒரே மாதம் பொறுங்க கூவத்தூரில் கிடைத்ததுபோல் அதே மடங்கு உங்களுக்கு கிடைக்கும்'னு சொல்றாங்க. எங்களில் பலர் எதிர்பார்ப்பது பணம், பொருள் அல்ல... அடுத்தடுத்த முறையும் நாங்கள் பதவி உள்ள அரசியல்வாதிகளாக நடமாட வேண்டும் என்பதுதான்'' என அந்த மூத்த எம்.எல்.ஏ. வெளிப்படையாகவே பேசினார்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதே கொங்கு மண்டலம் நெருக்கடியை உருவாக்குகிறது.
 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.