கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்துடன் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி, பா.ஜ.க. நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா என கேள்வியெழுப்பினர். மேலும், ஆளுநர் எதன் அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அழைத்தார் எனவும் கேட்டார்.
இதையடுத்து நீதிபதி சிக்ரி, நாளை மாலை 4 மணிக்கே இரண்டு கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், பா.ஜ.க. தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்கி நாளை வாக்கெடுப்பு நடத்தவேண்டாம். கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை நிராகரித்த நீதிபதி நாளை மாலையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என உத்தரவிட்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாயின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நாங்கள் கூறியதை, இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு மெய்ப்பித்திருக்கிறது. இதன்மூலம், குறைந்த தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பா.ஜ.க.வின் முரட்டுத்தனம் அடக்கி வைக்கப்பட்டுள்ளது. சட்டரீதியில் தவறுகளை நிறுத்திவிட்டோம். இனி அவர்கள் பணம் மற்றும் அதிகாரத்தை வைத்து பிரச்சனை செய்யத் துணிவார்கள்’ என பதிவிட்டுள்ளார்.