பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு நேற்று (19/12/2020) சென்ற பா.ஜ.க. முருகன், பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி; முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க.தான் அறிவிக்கும் என்று போகிற போக்கில் ஒரு குண்டை வீசியிருக்கிறார். முருகனின் இந்த பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இது குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் எடப்பாடியை தொடர்பு கொண்டு முருகனின் பேச்சுக்கு அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், தங்களின் டெல்லி லாபி மூலமாக, 'முருகனின் வாய்க்கு கடிவாளம் போடுங்கள் அல்லது அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி இருக்கிறதா இல்லையா என தெளிவுப்படுத்தி விடுங்கள்' என பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவலை பாஸ் பண்ண எடப்பாடி திட்டமிடுவதாக அ.தி.மு.க. தரப்பில் பரவி வருகிறது.