பின்னர் எப்படியோ தகவல்கள் லீக்காகி வெளியே கசிய, எம்.பி.கனிமொழி தன்னோடு கட்சியினரை உடனழைத்துக் கொண்டு கடும் சிரமத்திற்கிடையே ஏரல் நகருக்குள் சென்றவருக்கு அதிர்ச்சி. சாலை முழுக்க வெள்ளம் கொள்ளளவையும் தாண்டிய உயரம். சிதைந்த வீடுகள். நொறுங்கிய சாலைகள், துண்டாகிப் போன ஏரல் பெரிய பாலம். சற்றும் தளராத எம்.பி. கனிமொழி இன்ஸ்டண்ட்டாக நான்கு நாட்களாக அன்ன ஆகாரமின்றித் தவித்த மக்களுக்கு உதவியவர், பின்பு அவர் மூலம் ஏரல் சீரழிவு பற்றி முதல்வர் ஸ்டாலின் வரை போக, தாமதமில்லாமல் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இருவரையும் அங்கு விரையச் செய்திருக்கிறார்.
பத்து நாட்களாக அமைச்சர்கள் ஏரல் நகரிலேயே மையமிட்ட நிலையில், ஏரலை உள்ளடக்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. மா.செ.வும், ஏரல் நகருக்கு வெகு சமீபமாகக் குடியிருக்கும் அமைச்சர் அனிதா ஸ்பாட்டுக்கு வராமல் போனதையறிந்த அமைச்சர் மூர்த்தி, நிலைமையைத் தெரிவித்து ஏரல் நகருக்கு வரும்படியும், நீங்களும் வந்தால் இங்க நிவாரணப் பணிகள் விரைவில் முடியும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்திருக்கிறார். ஆரம்பம் முதல் அமைச்சர்களுக்கு கட்சியின் முக்கிய புள்ளியும், தி.மு.க.வின் தெற்கு மாவட்ட வர்த்தகர் அணித் தலைவரும் ஏரலின் பண்டாரவிளைப் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் நிவாரணப் பணிகளில் உதவி செய்து வருவதையறிந்த அமைச்சர் அனிதா, தன்னால் அங்கு வர முடியாது. உங்களுடனிருக்கிற கட்சி நிர்வாகி சுந்தர்ராஜனைக் கொண்டே வேலையைப் பாருங்கள் என்று சொல்லி முடித்துக் கொண்டாராம்.
ஏரியா அமைச்சர் இப்படியா பதில் சொல்வது என்ற அதிர்ச்சியில் அப்செட் ஆகியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி. அதன்பின் வேகமெடுத்த பணிகள் விரைவில் முடிந்ததையடுத்து கடந்த வாரம் ஏரல் நகருக்கு நிவாரணப் பொருட்களை வழங்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் மட்டும் தலை காட்டியிருக்கிறார் அனிதா. அமைச்சர் உதயநிதியின் நிகழ்ச்சியில் இல்லாமலிருந்தால் விவகாரமாகிவிடும் என்பதால்தான் அதனைத் தவிர்க்கிற வகையில் தலைகாட்டியிருக்கிறார் அனிதா. இந்த சம்பவம் உளவுத் துறையின் மூலம் மேல்மட்டம் வரை போய்விட்டது என்கிறார்கள் உள்ளூர் கட்சியினர்.