ADVERTISEMENT

“விவசாயிகளுக்கான அரசாக மார் தட்டும் அதிமுக; விளம்பரத்திற்காக இப்படிப் பேசுவதா...” - செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ

09:38 PM Nov 16, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கனமழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் 1000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எனினும் மயிலாடுதுறை சீர்காழி போன்ற பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரண நிதியாக ஏக்கருக்கு 30,000 கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, “அதிமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, திமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சா? எதிர்க்கட்சியாக இருந்தாலும் நியாயமாகப் பேசவேண்டும் அல்லவா?” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2020 டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், கடலூரில் 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கடலூரில் நெல் மட்டுமல்லாது வாழை, பொங்கல் கரும்பு, நிலக்கடலை, பருத்தி, காய்கறிப்பயிர்கள் போன்றவை ஆயிரக்கணக்கான ஏக்கரில் சேதமடைந்தன.

இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி தஞ்சாவூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்தன. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டங்களை அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய டிசம்பர் 28, 2020 அன்று தமிழகம் வந்த மத்தியக் குழுவின் அறிவுரைப்படி, புள்ளி விவரங்கள் இறுதி செய்யப்பட்டு, பாதிப்படைந்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விவரங்களும் சரிபார்க்கப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று கூறினார். இன்று ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு? குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் கொடுத்தார்களா?

அதிமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, திமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சா? எதிர்க்கட்சியாக இருந்தாலும் நியாயமாகப் பேசவேண்டும் அல்லவா? அரசியல் செய்ய வேண்டுமென்ற விளம்பர நோக்கத்திற்காக இப்படியெல்லாம் முன்னாள் முதல்வர் பேசுவதா? மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் தகுந்த இழப்பீட்டை இந்த தமிழக அரசு வழங்கும் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவான அரசு ஜெயலலிதா அரசுதான் என்று மார்தட்டிச் சொல்லிக் கொள்ளும் அதிமுக, அவர்கள் கூட்டணியில் உள்ள ஒன்றிய அரசிடம் பேசி விவசாயிகளுக்குத் தேவையான நிவாரண நிதியைக் கேட்டுப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT