ADVERTISEMENT

‘எனக்கு பதவி தரலன்னா அவ்ளோதான்’ முன்னாள் அமைச்சரை சிறையில் இருந்தபடி மிரட்டிய அதிமுக நகர செயலாளர்! 

04:54 PM Apr 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக உட்கட்சித் தேர்தல் இரண்டாம் கட்டமாக மார்ச் 27ஆம் தேதி தொடங்கி 25 கழக மாவட்டங்களில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி கழக நிர்வாகிகளுக்கு நடக்கிறது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்துக்கான தேர்தலில் நகரசெயலாளர் ஒருவர், சிறைக்குள் இருந்தபடி கட்சியின் அமைப்பு செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான முன்னாள் அமைச்சரை மிரட்டியதும் பரபரப்பாகியுள்ளது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திலுள்ள நகரம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் மனு தந்தனர். ஆரணி அதிமுக நகரச் செயலாளர் அசோக்குமார், நகரக் கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார். தங்க நகைக்கடன் வழங்கியதில் 3 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுப்பட்டதால் மார்ச் முதல் வாரம் கைது செய்யப்பட்டு திருவண்ணாமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்தான் உட்கட்சித் தேர்தல் நடக்கிறது. நகரச் செயலாளர் பதவிக்கு நகர வைஸ்.சேர்மன் பாரி.பாபு, ஏ.ஜி.ஆனந்தன், சரவணன் என மூவர் மனு செய்தனர். சிறையில் உள்ள ந.செ அசோக்குமார் சார்பாக ஆரணி தொகுதி எம்.எல்.ஏவான முன்னாள் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் வேட்புமனுதாக்கல் செய்ய அதிமுக வட்டாரத்தில் பரபரப்பானது.

இதுக்குறித்து நம்மிடம் பேசிய ஆரணி நகர அதிமுகவினர், 2016 – 2021 வரை அமைச்சராக இருந்த சேவூர்.ராமச்சந்திரனை, ஆரணி தொகுதி ஒன்றிய, நகர நிர்வாகிகள் மதிக்கவில்லை. இதனால் தனக்கு வேண்டப்பட்ட நிர்வாகிகளை வைத்து கட்சி வேலைகள் செய்தார். ஆரணி நகரத்தில் கட்சி வேலைகளை இப்போது வைஸ்.சேர்மனாகவுள்ள நகர ஜெ. பேரவை செயலாளர் பாரி.பாபுவிடம், அடுத்த ஆரணி ந.செ நீதான் என வாக்குறுதி தந்து கட்சி கூட்டங்களை நடத்தினார். அவரும் அடுத்த ந.செ நாம்தான் என தாராளமாக செலவு செய்தார். தற்போது நடக்கும் உட்கட்சித் தேர்தலில் ந.செ பதவிக்கு மனு செய்ய முடிவு செய்த பாரி.பாபு, முன்னாள் அமைச்சரிடம் போய் கேட்டபோது, மனு செய் என்றார்.

இந்தத் தகவல் சிட்டிங் ந.செவான சிறையில் உள்ள அசோக்குமாரிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். என்னைத்தான் ந.செவா தேர்வு செய்யவைக்கனும், அப்படி செய்யலன்னா அமைச்சரா இருக்கும்போது எங்கங்க சொத்து வாங்கி வச்சி இருக்கிங்க, உங்க பினாமிங்க யார், யார்? வேலை வாங்கி தர்றன்னு பணம் வாங்கிக்கிட்டு தராதது, எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற மாற்று கட்சியில் உங்களுக்கு உதவியது யார், யார் என்கிற எல்லாத்தையும் வெளியில சொல்லுவன் என சிறையில் இருந்தபடியே மிரட்டலாக தகவல் அனுப்பியுள்ளார். இந்தத் தகவலை அவர்கள் எம்.எல்.ஏவான சேவூர்.ராமச்சந்திரனிடம் சொன்னதும், ஆடிப்போய்விட்டார். உடனே ஐ.டி விங்கில் உள்ள சரவணன் என்பவரை சிறைக்கு அனுப்பி வேட்புமனுவில் கையெழுத்து வாங்கிவந்து ந.செ பதவிக்கு அசோக்குமாருக்காக எம்.எல்.ஏவே மனுவை தாக்கல் செய்தார்.

மோசடி புகாரில் ஜெயில்ல இருக்கறவருக்காக நீங்க எப்படி மனு செய்யலாம் என ந.செ பதவியை குறிவைத்துள்ள பாரி.பாபு, சரவணன், ஆனந்தன் தரப்பு நேரடியாக அவரிடம் கேட்டனர். இப்போ பதவி தரலன்னா நாமளே அவரு தப்பு செய்தாருனு ஒத்துக்கிட்ட மாதிரி இருக்கும், அதனால் அவரையே ந.செ வாக்கிவிடலாம். இந்ததொகுதியில் உள்ள 4 ஒ.செகளையும் மாற்ற வேண்டாம் அவர்களையே மீண்டும் தேர்வு செய்துவிடலாம் எனச்சொல்லியுள்ளார். ஆரணி வடக்கு ஒ.செ பி.ஆர்.ஜீ.சேகர் உடல்நிலை சரியில்லாமல் பதவி வேண்டாம், வேறு யாருக்காவுது தந்துடுங்க என்கிறார், அவரை மாற்றக்கூடாது என்கிறார் இவர்.

முன்னாள் அமைச்சரின் முடிவை நான் ஏற்றுக்கமாட்டேன் என வடக்கு மா.செ தூசி.மோகனிடம் மாவட்ட கழக பொருளாளரான கோவிந்தராஜ் சொன்னவர், ஜெயில்ல இருக்கறவருக்கு பதவி தரக்கூடாது. ந.செவா அவர் சமூகத்தை சேர்ந்தவங்களே கடந்த 25 வருஷமா இருந்துட்டாங்க. இங்க பலமா இருக்கற வன்னியர்களுக்கு இந்த முறை ந.செ பதவி வேண்டும், என்மகன் ஆனந்தனை ந.செவாக்குங்க என்றுள்ளார். நகரசெயலாளர் பதவி ஆசைக்காட்டி கடந்த 5 வருடத்தில் சிலகோடிகளை என்னை செலவு செய்யவச்சார். அது உங்களுக்கே தெரியும், 27 வட்டசெயலாளர்கள் என் ஆதரவாளர்கள் அதனால் சொன்னப்படி ந.செ பதவியை எனக்குதான் தரனும் என்றுள்ளார் பாரி.பாபு. 50 கோடி ரூபாய் செலவு செய்து எம்.எல்.ஏவாகி கட்சி மானத்தை இந்தமாவட்டத்தில் நான் காப்பாத்தி இருக்கேன், அசோக்குமாரை ந.செ பதவியில் நியமிக்கனும் என்கிறார் முன்னாள் அமைச்சர். ஆரணி விவகாரத்தில் நான் தலையிடல நீங்களே முடிவு செய்துக்குங்க எனச்சொல்லி ஒதுங்கியுள்ளார் தூசி.மோகன். நான் சொல்வதை செய்யச் சொல்லுங்க என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவகாரத்தை கொண்டுசென்றுள்ளார் எம்.எல்.ஏ என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT