இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் நிலை என்ன என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன், “மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்தி வைக்கலாம்” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், “வழக்கில் தீர்ப்பு வரவில்லை என்றால் பதில் மனுவை தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாம் அல்லது வழக்கை ஒத்தி வைப்பதாக இருந்தால் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து, “தீர்ப்பு வரும் வரை அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தமாட்டோம்” என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், நவம்பர் 18ம் தேதி சட்டமன்றத்திற்கு வந்த ஓ.பி.எஸ். அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்தாமல் காவி வேட்டியை உடுத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு எனும் தலைப்பில் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டம் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திலும் ஓ.பி.எஸ். காவி வேட்டி அணிந்து கொண்டு பங்கேற்றார். அதேபோல் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்தியிருந்தனர். இந்தக் கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களும், நிர்வாகிகளும், ஓ. பன்னீர் செல்வத்திற்கு மாலை அணிவித்து வீரவாள் பரிசாக வழங்கினார்கள்.