ADVERTISEMENT

"தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது" - ஜெயக்குமார் 

02:58 PM Feb 02, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையர் சந்திப்புக்கு பின் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயக விரோத செயல்கள், அத்துமீறல்கள், அநியாயங்களை ஆளும் திமுக அரசு அரங்கேற்றுவதால் அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச் சாவடிகள் உள்ளன. 238 வாக்குச் சாவடிகளிலும் அதிமுகவின் பொறுப்பாளர்கள் சென்று கள ஆய்வு செய்தபோது அங்கு சுமார் 30,000 முதல் 40,000 வரை உரிய வாக்காளர்கள் இல்லாமல் வாக்காளர் பெயர் பட்டியல் மட்டுமே உள்ளன. இதனை கொண்டு திமுகவினர் வாக்காளர் அட்டையை தயாரித்து போலியாக வாக்கு செலுத்த உள்ளனர். எனவே தேர்தல் ஆணையம் உரிய ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளோம்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் 237வது வாக்குச் சாவடி ரயில்வே காலனியில் உள்ள 180 வாக்காளர்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். எனவே அதனை சரி செய்ய வேண்டும். இடம்பெயர்ந்து சென்றவர்கள் வேறு ஒரு இடத்தில் வாக்காளர்களாக பதிவு செய்து இருப்பார்கள். இதனால் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு ஏற்பட்டு விடும். இல்லையெனில் அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றோம். பண பட்டுவாடா போன்ற முறைகேடுகளை களைந்து ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்றோம். தேர்தல் ஆணையரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

நாங்கள் தான் அதிமுக. இரட்டை இலை சின்னம் முடக்க முடியாது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் அது பற்றி கருத்து சொல்வது ஏற்புடையது ஆகாது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போட்டி இடுவது என்பது அவரை சார்ந்து இருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும். அது ஒரு மண் குதிரை என்று. மண் குதிரை கரை சேராது. கூட்டணி தொடர்பான பெயரில் முற்போக்கு என்ற வார்த்தை அச்சுப் பிழை தான். அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடுவதில்லை. கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி தர்மம் என்று ஒன்று உள்ளது. அதன்படிதான் நாங்கள் செயல்படுகிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் தலைமை. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. 2019 ல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தபோது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றார். அதில் பாஜகவும் தானே இருந்தது. இன்றைக்கும் இந்த கூட்டணி தொடர்கிறது. பாஜக ஒரு தேசியக் கட்சி. உரிய நேரத்தில் அவர்களின் முடிவை அறிவிப்பார்கள். உடனே முடிவை தெரிவிக்க வலியுறுத்த முடியாது. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தேர்தலை பொறுத்தவரை முன்வைத்த காலை பின் வைக்க போவதில்லை.

கடலில் பேனா சின்னம் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மீனவர்களால் வலை விரிக்க முடியாது; படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாது.மேலும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும். அரசு பணத்தை விரயம் செய்யாதீர்கள். இந்தியாவில் உள்ள கட்சிகளில் அதிக நிதி உள்ள கட்சி திமுக. அறிவாலயத்தில் சின்னத்தை வைத்துக்கொள்ளட்டும். 80 கோடி ரூபாயை செலவு செய்து எழுதாத பேனா வைப்பது அவசியமா? இது தொடர்பாக நடைபெற்ற கூட்டம் என்பது கருத்து கேட்புக் கூட்டமாக இல்லாமல் திமுகவின் பொதுக் கூட்டமாக மாறிவிட்டது. முழுக்க முழுக்க சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் நடைபெற்ற கூட்டம். பேனா சின்னத்தை அறிவாலயத்தில் அமைத்தால் ஓகே. ஆனால் கடலில் வைத்தால் கடுமையாக எதிர்ப்போம்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT