Skip to main content

அன்வர் ராஜா சொன்ன ஜெயலலிதாவின் வரலாறு தெரியுமா?

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

History of Dissolution of Vajpayee regime by Jayalalitha

 

அ.தி.மு.க.விலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கட்சியில் இணைந்தார். இந்த இணைப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பின்னிப்பிணைந்து கூட்டணியில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எங்கள் கொள்கையில் இடையூறு ஏற்படுமானால் கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அ.தி.மு.க. தயங்கியது இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று கூட்டணியை முறித்து ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு வந்தவர் என்பது வரலாறு” என்று பேசியிருந்தார். 

 

அன்வர் ராஜா சொன்ன 1998 வரலாறு தெரியுமா? 

 

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்று முதல் முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்றார். 1991 முதல் 1996 வரை நடந்த ஜெயலலிதா தலைமையிலான அந்த ஆட்சியில் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்து, அதன்தொடர்பான வழக்குகளையும் சந்தித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு நடந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் அதிமுக வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வென்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில், திமுக வேட்பாளரான சுகவனம் என்பவரிடம் தோற்றுப் போனார். 

 

History of Dissolution of Vajpayee regime by Jayalalitha

 

1996 சட்டமன்றம் முடிந்தநிலையில், 1998ல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. 1998 தேர்தல் பிரச்சாரத்திற்காக அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அத்வானி கோவை வந்திருந்தார். அப்போது தான், கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 18 தொகுதிகள், கூட்டணியில் இருந்த கட்சிகள் 12 தொகுதிகள் என மொத்தமாக அ.தி.மு.க. கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றது.

 

History of Dissolution of Vajpayee regime by Jayalalitha

 

இந்தத் தேர்தலின் முடிவில், மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க.வின் ஆதரவு தேவைப்பட்டது. அதன்படி அ.தி.மு.க.வின் ஆதரவுடன் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானார். முதலில் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகச் சொன்ன ஜெயலலிதா, பிறகு அ.தி.மு.க. எம்.பி.க்களை அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார். சேடப்பட்டி முத்தையா, தம்பிதுரை ஆகிய இருவரும் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். அதே நேரத்தில், பூட்டாசிங், ராமகிருஷ்ண ஹெக்டே, ராம் ஜெத்மலானி போன்ற அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கொடி பிடித்தார். இதனால், வாஜ்பாய் மிகுந்த தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஆனாலும், பூட்டாசிங்கை மட்டும் அமைச்சரவையிலிருந்து நீக்கினார். இதேரீதியில், நினைத்த மாத்திரத்தில் ஏதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்து, நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வந்தார். தன் மீதான வருமான வரி வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்றார்.

 

History of Dissolution of Vajpayee regime by Jayalalitha

 

அடுத்து, இந்திய அரசியலமைப்பு விதி 356-ஐ பயன்படுத்தி, அப்போது கலைஞர் தலைமையில் தமிழகத்தில் நடந்துவந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று அழுத்தம் தந்தார். ஜெயலலிதாவை சமாதானப்படுத்துவதற்காக, டெல்லியிலிருந்து பா.ஜ.க. பிரதிநிதிகள் போயஸ் கார்டனுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். ஜெயலலிதாவோ, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பதவி விலக வேண்டும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமியை நிதியமைச்சராக்க வேண்டும், வாழப்பாடி ராமமூர்த்தி வசம் இருந்த பெட்ரோலியத்துறையை பறித்தாக வேண்டும் என்று நிபந்தனைகளை அடுக்கிக்கொண்டே போனார். பிரதமராக இருந்த வாஜ்பாய், செய்வதறியாது திக்குமுக்காடினார்.

 

இந்த நிலையில்தான், டெல்லி அசோகா ஓட்டலில், சுப்பிரமணியன் சாமி ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டார் ஜெயலலிதா. சோனியா காந்தி உட்பட, சந்திரசேகர், நரசிம்மராவ், குஜ்ரால், தேவகவுடா, முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் அந்த விருந்தில் பங்கேற்றனர்.

 

History of Dissolution of Vajpayee regime by Jayalalitha

 

ஜெயலலிதா அடுத்து டெல்லிக்கு கிளம்பியது 1999, ஏப்ரல் 12-ஆம் தேதி. ‘எதற்காக டெல்லி விஜயம்?’ என்று சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வாஜ்பாய் அரசை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ஒரு புதிய அரசை நிறுவப் போகிறோம். அதற்காகவே டெல்லி செல்கிறேன்” என்று தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

1999, ஏப்ரல் 17, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு வாக்குகள் 269 ஆகவும், எதிரான வாக்குகளாக 270-ம் விழுந்தன. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாயின் 13 மாத பா.ஜ.க. அரசு கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்த 1999 ஏப்ரல் 17 ஆம் தேதி வாஜ்பாய், “இன்று நான் நிம்மதியாக உறங்குவேன்” என்றார். 

 

ஜெயலலிதாவின் இந்த முடிவை பலரும் விமர்சித்தபோதும், சிலர் இந்தத் துணிச்சலான முடிவை அவரைத் தவிர வேறு யாராலும் எடுக்கமுடியாது என்று பேசினர். அதேபோல் தற்போது, அன்வர் ராஜாவின் பேச்சுக்கு, ‘ஜெயலலிதாவால் மட்டும் தான் அப்படியான முடிவை எடுக்க முடியும். தற்போதைய அ.தி.மு.க.வின் தலைமையான இ.பி.எஸ். அல்லது ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் இணைந்தும்கூட அப்படியான ஒரு முடிவை எடுக்க முடியாது’ என்று தெரிவித்துவருகின்றனர். 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.