அதே சமயம், அ.தி.மு.க. ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இன்று அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளின் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., திருவள்ளூர், மத்திய சென்னை, தஞ்சாவூர், விருதுநகர் மற்றும் கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி உட்பட 33 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் என 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிடக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 16 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள 17 வேட்பாளர்களை நாளை அ.தி.மு.க. அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோன்று தேனி, ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. நேரடியாகப் போட்டியிடுவதால் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் போட்டியிடவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.