ADVERTISEMENT

மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் திட்டம்? -'ஆவின்' நிர்வாகம் மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

09:54 AM Jul 09, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் சார்பில் 5 வகையான புதிய பால் பொருட்களை தமிழக முதல்வர் அவர்கள் நேற்று (08.07.2020) அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் நான்கு பால் பொருட்கள் (மோர், லஸ்ஸி 2வகை, 90நாள் கெட்டுப் போகாத பால்) ஏற்கனவே வணிக சந்தையில் உள்ளவையே.

ஏற்கனவே பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டி அழகு பார்த்து விட்ட பிறகும் மீண்டும் புத்தாடை அணிவித்து அக்குழந்தை புதிதாக பிறந்திருப்பதாகக் கூறுவது போல் அமைந்திருக்கிறது தமிழக பால்வளத்துறையின் செயல்பாடுகள்.

இது போல்தான் ஏற்கனவே வணிகச் சந்தையில் இருந்த ஆவின் சிறிய பாக்கெட்டை (10 ரூபாய்) புதிதாக விற்பனைக்குக் கொண்டு வருவது போல் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிப்பு கொடுத்து மூக்குடைபட்டார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அது போலவே தற்போதும் விற்பனையில் உள்ள லஸ்ஸி, மோர், 90நாட்கள் கெட்டுப் போகாத பால் போன்ற பால் பொருட்களுக்கு புத்தாடை அணிவித்து அவை புதிதாகப் பிறந்திருப்பதாகக் கூறி இந்தக் கரோனா பேரிடர் காலத்திலும் ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்பது போன்ற மாயத் தோற்றத்தை மக்களிடையே உருவாக்க முயன்றுள்ளனர். மேற்கண்ட பால் பொருட்கள் வணிகச் சந்தையில் ஏற்கனவே இருப்பதைத் தமிழக முதல்வருக்கு அது குறித்த உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினார்களா..? இல்லை திட்டமிட்டு மறைத்து விட்டனரா..? எனத் தெரியவில்லை.

மேலும் முதல்வர் அவர்கள் அறிமுகம் செய்துள்ள "ஆவின் டீ மேட் பால்" முற்றிலும் மக்களையும், வணிகர்களையும் ஏமாற்றும் செயலாகும்.

ஏனெனில் தற்போது விற்பனையில் உள்ள ஆவின் கொழுப்புச் சத்து, செரிவூட்டப்பட்ட பால் (கொழுப்பு சத்து 6.0% திடசத்து 9.0%) அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 1லிட்டர் 51.00ரூபாய். அதுவே மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 1லிட்டர் 49.00ரூபாய் மட்டுமே.

ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஆவின் டீ மேட் பால்" கொழுப்பு சத்து 6.5% திடசத்து 9.0% எனவும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 1லிட்டர் 60.00ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் 0.5% கொழுப்பு சத்தை மட்டும் அதிகரித்து விட்டு 1லிட்டருக்கு 9.00ரூபாய் முதல் 11.00ரூபாய் வரை அதிக விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

அதே சமயம் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் பாலினை (1TS×2.66) 32.00 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அப்படியானால் 0.5TSக்கு 1.50வரை அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்யலாம்.

ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஆவின் டீ மேட் பாலில்" ஏற்கனவே விற்பனையில் உள்ள கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலினை விட 0.5%மட்டும் (0.5TS-1.33) கூடுதலாக்கி விற்பனை விலையில் 1லிட்டருக்கு 11.00ரூபாய் வரை அதிகரித்திருப்பதைப் பார்க்கும் போது தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பால் விற்பனை விலையைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனரோ என்கிற பெருத்த சந்தேகம் எழுகிறது.

மேலும் சென்னை மாநகரில் உள்ள சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் ஆவின் டீ மேட் பாலினை அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கே பால் முகவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். சில இடங்களில் மட்டும் சில சலுகைகளை வழங்குகின்றனர். அப்படியானால் ஆவின் டீ மேட் பாலினை என்ன விலைக்கு ஆவின் நிர்வாகம் வழங்குகிறது என்கிற வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இது மக்களையும், பால் முகவர்களையும், சில்லறை வணிகர்களையும் ஏமாற்றி கொள்ளையடிக்கும் திட்டத்துடனே நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனவே தமிழக அரசு புதிய வகை ஆவின் பாலிற்கு நியாயமான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட், மொத்த விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் விலையில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT