உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன்கராணமாக லட்சக்கணக்கான உக்ரைனியர்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தச்சூழலில் உக்ரைன் ரஷ்யாவோடு பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளது.
இதனிடையே உக்ரைனில் உள்ள இந்தியர்களை, உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் இந்தநிலையில் இந்திய மாணவர்கள் உக்ரைனிலிருந்து அண்டை நாடான போலந்தில் நுழைவதை உக்ரைன் வீரர்கள் தடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டிற்குள் செல்ல முயலும் இந்திய மாணவர்களை உக்ரைன் இராணுவத்தினர் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
அதேபோல் உக்ரைன்-போலந்து எல்லையிலிருந்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேசிய மான்சி சவுத்ரி என்ற இந்திய மாணவி, இந்திய மாணவர்களை உக்ரைன் வீரர்கள் தாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவர்கள் எங்களை சித்திரவதை செய்கிறார்கள். இந்திய மாணவர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். எல்லையை கடந்து போலந்துக்குச் செல்ல எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. மாணவிகள் கூட துன்புறுத்தப்படுகிறார்கள். முடியைப் பிடித்து இழுக்கிறார்கள். இரும்பு தடிகளால் தாக்குகிறார்கள் . சில மாணவிகளுக்கு எலும்பு முறிவும் காயங்களும் ஏற்பட்டுள்ளது.
இந்தியத் தூதரக அதிகாரிகள் எங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அளித்து உதவி செய்து வருகின்றனர். எல்லை பாதுகாப்பு படையினர் எங்களை எல்லையை கடக்க அனுமதிக்கவில்லை. யாரேனும் கடக்க முயன்றால், கம்பியால் தாக்குகின்றனர். அவர்கள் முகத்தில் குத்துகிறார்கள். நேற்று அவர்கள் துப்பாக்கிச் சூடுகூட நடத்தினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச்சூழலில் நேற்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்திய பிரதமர் மோடி, இன்று மீண்டும் ஒரு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார். இதற்கிடையே ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் வி.கே.சிங் ஆகிய மத்திய அமைச்சர்கள் இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்கவும், மாணவர்களுக்கு உதவவும் உக்ரைனின் அண்டைநாடுகளுக்கு செல்லவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 26 ஆம் தேதி, “மீட்பு திட்டத்தை செயல்படுத்துவதில், உக்ரைனின் எல்லைப்பகுதிகளில் கூட இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லை” எனவும், ”சம்பந்தப்பட்ட அண்டை நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் ஒருங்கிணைக்க எல்லைப் பகுதிகளுக்கு மத்திய அரசு, ஒரு குழுவை கூட அனுப்பவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது” எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.