கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடியில் மோதி விபத்துக்குள்ளானது.
கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம், பைந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷிரூர் என்ற இடத்தில் நோயாளியை அழைத்துக் கொண்டு அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று மழையில் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சிரூர் சுங்கச்சாவடியில் தடுப்புகளை உடைத்து தாறுமாறாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆம்புலன்ஸில் டிரைவர் உள்பட 8 பேர் பயணம் செய்த நிலையில், கஜானனா, லோகேஷ், மஞ்சுநாத் மற்றும் ஜோதி ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த பைந்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று ஆய்வு செய்தனர். மேலும், விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்தனர். அத்துடன், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.