ADVERTISEMENT

சிக்கலில் ட்விட்டர் - இந்தியாவில் சட்டப்பாதுகாப்பை இழக்கிறது!

10:44 AM Jun 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய விதிகளை அறிவித்தது. இந்தப் புதிய விதிகளை ஏற்றுக்கொள்வதற்கான அவகாசம் கடந்த 26ஆம் தேதியோடு முடிவடைந்தது.

சமூகவலைதளங்களில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. ட்விட்டர் நிறுவனம் மட்டும் விதிகளை முழுமையாக ஏற்கவில்லை. சமூகவலைதளங்கள், தலைமை இணக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்; நிறுவன ஊழியர் ஒருவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமிக்க வேண்டும்; நோடல் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன மத்திய அரசின் விதிமுறைகளில் ஒன்றாகும். இதில் ட்விட்டர் இன்னும் தலைமை இணக்க அதிகாரியை நியமிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அண்மையில் மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் "நல்லெண்ண நடவடிக்கையாக, விதிகளுக்கு உடனடியாக இணங்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு கடைசி அறிவிப்பு வழங்கப்படுகிறது. இணங்கத் தவறினால், 2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐ.டி சட்டத்தின் 79ஆம் பிரிவின்கீழ் ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்படும் விலக்குத் திரும்பப் பெறப்படும். மேலும் தண்டனைச் சட்டம் பாயும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐ.டி சட்டம் 2000த்தின் 79ஆம் பிரிவின்படி, பயனர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு சமூகவலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோட்டீஸ் தொடர்பாக அண்மையில் விளக்கமளித்த ட்விட்டர் நிறுவனம், புதிய விதிகளுக்கு இணங்குவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறியது. இந்தநிலையில், ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்டப்பாதுகாப்பு, அதாவது ஐ.டி சட்டத்தின் 79ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள விலக்கை மத்திய அரசு திரும்பப் பெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த சட்டப்பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டால், பயனர்களின் கருத்துக்கு ட்விட்டர் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். மேலும் பயனர்களின் கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT