ADVERTISEMENT

உணவு கொடுக்காததால் ஆத்திரம்; மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!

06:33 PM Mar 19, 2024 | mathi23

உத்தரப்பிரதேசம் மாநிலம், சீதாபூர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராம். இவருக்கு பிரேமா தேவி (28) என்ற மனைவி இருந்தார். பரசுராம், அங்குள்ள பகுதியில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (18-03-24) பரசுராமின் மனைவி பிரேமா தேவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், பரசுராமின் வீட்டுக் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு பரசுராம் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார்.

ADVERTISEMENT

வீட்டில் மர்மமான முறையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் இறந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், வழக்கம்போல் விவசாயம் பார்த்து நேற்று மதியம் வீட்டுக்கு வந்த பரசுராம், தனது மனைவி பிரேமா தேவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் சாப்பாடு தயாராகவில்லை என்று பிரேமா தேவி கூறியுள்ளார். மேலும், சாப்பாடு தயார் செய்ய நேரம் அதிகமானதால், பரசுராம் கோபமடைந்துள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பரசுராம், அங்கு இருந்த கத்தியை எடுத்து பிரேமா தேவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரேமா தேவி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு பதற்றமடைந்த பரசுராம், மனைவியைக் கொலை செய்ததற்காக சிறை செல்ல நேரிடுமோ என்று பயந்து வீட்டுக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. சாப்பாடு செய்ய நேரம் அதிகமானதால் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT