மே 1ஆம் தேதி புனிட் யோகி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்தியன் ரயில்வேயில் வழங்கப்படும் டீ இது எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். சுமார் 45 விநாடிகள் இருக்கும் அந்த வீடியோவில், ரயில் பெட்டி ஒன்றில் இருந்து டீ கேன்களை வியாபாரி ஒருவர் வெளியில் எடுத்துத் தருவதும், மற்றவர்கள் அதை எடுத்துச் செல்வதுமாக காட்சிகள் இருக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
அதில், இந்த வீடியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை செண்ட்ரல் - ஐதரபாத் சார்மினார் இடையே செல்லும் சார்மினார் விரைவுரயில் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஒப்பந்ததாரர் சிவபிரசாத் என்பவர் சிக்கியுள்ளார். கழிவறை நீரை கேனில் நிரப்பவில்லை. மீதமிருந்த டீயைத்தான் புதிய கேனில் மாற்றினோம் என அவர் கூறியிருந்தாலும், அதற்கு உகந்த இடம் கழிவறை இல்லை எனக்கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அவருக்கான உரிமத்தையும் இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளது.