Skip to main content

ரயில்வே உணவு வழங்கல் சேவை நிறுத்தப்பட்ட விவகாரம்: நான்கு வாரங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

Railway catering service suspended: High Court orders review in four weeks!

 

கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நடமாடும் உணவு வழங்கல் சேவையையும் நிறுத்தி வைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்நிலையில், ரயில்களில் நடமாடும் உணவு வழங்கல் சேவைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, இந்திய ரயில்வே, டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய டெண்டரை ரத்து செய்து, உணவு வழங்கல் சேவைக்காக கடந்த முறை உரிமம் பெற்றுள்ளவர்களை அனுமதிக்கக் கோரி, இந்தியன் ரயில்வே நடமாடும் உணவு வழங்குவோர் சங்கத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ‘ரயில்வேயில் பல சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில், உணவு வழங்கல் சேவை இதுவரை துவங்கப்படவில்லை. இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என புகார் தெரிவிக்கப்பட்டது.

 

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பில் ‘புதிய டெண்டர் என்பது சிறப்பு ரயில்களுக்கு மட்டும்தான். வழக்கமான ரயில்களில் உணவு வழங்கலை அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்க தயாராக இருக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 


 
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கரோனா ஊரடங்கால் ரயில்வே உணவு வழங்கல் சேவையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் சேவையை மீண்டும் துவங்குவது தொடர்பாக நான்கு வாரங்களில் பரிசீலித்து  தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென, இந்தியன் ரயில்வேக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

சென்னையில் சிபிஐ சோதனை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
CBI raid in Chennai

சென்னை பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று (08.04.2024) காலை 06.30 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே துறையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.