தற்போது நாடறிந்த தொழிலதிபரான ரத்தன் டாடா ஆர்.எஸ்.எஸ் கூட்ட தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அடுத்தமாதம் கலந்துகொள்ளவிருக்கிறார் என்ற தகவல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தமாதம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடக்கவிருக்கும் நனா பால்கர் ஷமிர்தி சமிதி என்.ஜி.ஓ சார்பில் நடத்தப்படும் விழாவில் தொழிலதிபர் ரத்தன் டாடா பங்கேற்கயிருப்பதாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் டாடா மெமோரியல் மருத்துவமனை அருகே சமிதி என்.ஜி.ஓவின் அலுவலகம் அமைந்துள்ளது. கேன்சர் நோயாளிகளுக்கு உதவி புரியும் நிறுவனம் சமிதி என்பதால் ஏற்கனவே டாடா தங்கள் அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்த நிலையில் எங்கள் நிறுவனத்தின் தங்க விழாவிற்கு அவரை அழைத்துள்ளோம் என சமிதி அமைப்பின் செயலர் கூறியுள்ளார்.
ஏற்கனவே டாடா தனது 79-வது பிறந்தநாளன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி மேடையில் ஒன்றாக தோன்றபோகிறார்கள் என்ற செய்தி பலவிமர்சனங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.