ADVERTISEMENT

உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்களுக்கு இலங்கையில் பிரேதப் பரிசோதனை!

04:43 PM Jan 22, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 18-ஆம் தேதி ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் பகுதி மீனவர்களில் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், "இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை இந்தியாவில் நடத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் உண்மை தெரியவரும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மீனவர்களும் ஒருங்கிணைந்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு நேற்று, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்களின் உடல் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தான் பிரேதப் பரிசோதனை நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். அதேபோல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு விசாரணைக் குழுவும், கடற்படை வாழ்வியல் குழு தலைமையில் விசாரணைக் குழு என இரண்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்பொழுது யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் 4 தமிழக மீனவர்களின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நால்வரின் உடல்களும் இன்று இரவு 8 மணிக்கு காங்கேசன் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்படும். மேலும், நாளை உடல்கள் தமிழகம் கொண்டு வரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT