ADVERTISEMENT

பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவி - சகோதரிக்கு உருக்கமான கடிதம்!

10:53 AM Apr 01, 2024 | mathi23

ஆந்திரப்பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அனகாபல்லி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவி இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர், மாணவியைத் தேடி வந்தனர். மேலும், மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், மாணவியிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

ADVERTISEMENT

இதனால், இந்த சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், நள்ளிரவு 12:50 மணியளவில், அந்த மாணவி, தனது சகோதரிக்கு வாட்ஸ் அப் மூலம் உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

மாணவி அனுப்பிய அந்த குறுஞ்செய்தியில், ‘பதற்றப்பட வேண்டாம், நான் சொல்வதை கேளுங்கள். நான் ஏன் செல்கிறேன் என்று உங்களிடம் சொல்ல முடியாது. ஒரு வேளை நான் சொன்னால், உங்களால் புரிந்துகொள்ள முடியாது. தயவுசெய்து என்னை மறந்துவிடுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள். அம்மா.. அப்பா, நீங்கள் என்னை பெற்றடுத்து வளர்த்தற்கு நன்றி. எனது அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.

எனது சகோதரியே, உன் எதிர்காலத்தில் கவனம் செலுத்து. உனக்கு பிடித்ததையெல்லாம் படி. என்னை போல் திசை திரும்பி விடாதே. பிறரால் பாதிக்கப்படாதே. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். நல்ல வாழ்க்கையை வாழுங்கள். கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். கல்லூரி ஆசிரியர்களிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். ஆனால், அது உதவாது. என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் எனது புகைப்படங்களை எடுத்து என்னை மிரட்டுகிறார்கள். மற்ற பெண்களும் அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் யாரிடமும் சொல்ல முடியாது. எங்களால் கல்லூரிக்கு செல்வதையும் தவிர்க்க முடியவில்லை. இடையில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம். நான் காவல்துறையில் புகார் அளித்தாலோ அல்லது அதிகாரிகளை அணுகினாலோ எனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். நான் இந்த முடிவை எடுப்பதற்கு காரணம், நான் இப்போது போனால், சில வருடங்கள் நீங்கள் என்னை நினைத்து கவலைப்படுவீர்கள். பின்னர் என்னை மறந்துவிடுவீர்கள். ஆனால், நான் அருகில் இருந்தால், நீங்கள் எப்போதும் என்னை பார்த்து வருத்தப்படுவீர்கள். மன்னித்துவிடுங்கள். நான் உங்களை எல்லாம் பதற்றத்தில் உள்ளாக்கிவிட்டேன்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்த, மாணவியின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மாணவியின் படிக்கும் கல்லூரி வளாகத்தில் மாணவியின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், மாணவி தனது குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக, ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT