Skip to main content

"இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளும் அக்னிபத்" - சித்தராமையா விமர்சனம்

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

siddaramaiah slams agnipath scheme

 

இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு ஒன்றிய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. 

 

இந்நிலையில், மத்திய அரசின் இந்த புதிய திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, "ராணுவ வீரர்களை நியமிக்கும் புதிய அக்னிபத் திட்டம் இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளும் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக இந்த புதிய திட்டத்தைக் கைவிட்டு, தற்போதுள்ள நடைமுறையின்படி ராணுவ வீரர்களை நியமிக்க வேண்டும்.

 

2 கோடி வேலை வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, தற்போது இளைஞர்களுக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் மூடிமறைத்து வருகிறார். மோடி, ஆண்டுக்கு 2 கோடி வேலையில்லாத இளைஞர்களை உருவாக்குவதற்கான செயல்திட்டம் ஏதும் உங்களிடம் உள்ளதா? அக்னிபத் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு தங்களின் வேலை வாய்ப்புகள் குறித்த பாதுகாப்பற்ற தன்மையும், எதிர்காலம் குறித்து நம்பகத்தன்மை இல்லாமையும் இருந்தால் முழுமையாக பணியில் ஈடுபட முடியுமா? படையினர் இந்த பாதுகாப்பின்மையை வளர்த்துக் கொண்டால் இது ஆபத்தானது அல்லவா?

 

நமது அர்ப்பணிப்புள்ள ராணுவ வீரர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கி, வேலைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அளவுக்கு பாஜக அரசாங்கம் திவாலாகிவிட்டதா? மோடி அரசின் திவால் நிலையை மறைக்க நமது பாதுகாப்போடு விளையாடக் கூடாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த முயன்ற பாஜக அரசுக்கு நம் நாட்டு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். நமது இளைஞர்கள் மற்றும் நமது வீரர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதற்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

அதேபோல, இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ், "ராணுவத்திற்குக் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்களைச் சேர்க்கவில்லை. இப்போது அக்னிபத் என்ற பெயரில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ராணுவ வீரர்களைச் சேர்ப்பதாக அரசு அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் எதிர்காலம் என்ன?. ராணுவத்தில் சேருகிறவர்களில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான் அதிகம். வசதி படைத்தவர்கள் மற்றும் தேசபக்தி குறித்து மேடைகளில் முழங்கும் தலைவர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் சேருவது இல்லை. 

 

ராணுவத்தில் சேரும் இந்த இளைஞர்களுக்குப் பணி பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதை மத்திய அரசு அறிந்துகொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்தில் இந்த அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத அளவுக்கு நமது நாடு மோசமான நிலையில் உள்ளதா?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகப் பிரதமர் மோடி கூறினார். அதை அவர் செய்யவில்லை. இப்போது அக்னிபத் என்ற பெயரில் நாடகமாடுகிறார்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

“பெண்கள் தாலியை இழக்க நேரிடும்” - சித்தராமையா மகன் பரபரப்பு கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார்.

இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. ஆனால், பாஜக ஆதரவாளர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேசிய பழைய வீடியோ ஒன்றை கட் செய்து சமூக வலைத்தளங்களில் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தங்கள் தாலியை இழக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனுமான யதீந்திரா சித்தராமையா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனும், கர்நாடகா எம்.எல்.ஏவுமான யதீந்திரா நேற்று (22-04-24) மைசூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசியுள்ளார். மத உணர்வைகளை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஏன் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது என்று தெரியவில்லை. 70 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு இந்துக்களுக்கும் அநீதி ஏற்படவில்லை.

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துப் பெண்கள் தங்களது தாலியை இழப்பது மட்டுமல்லாமல், அனைத்து தாய்மார்களும் தங்கள் கணவனை இழக்க நேரிடும். பெண்கள் எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல் கணவன் மற்றும் குழந்தைகளை இழக்க நேரிடும். பா.ஜ.க நாட்டில் வகுப்புவாத வன்முறையை உருவாக்குகிறது. அவர்கள் மக்களை மத அடிப்படையில் போராட வைக்கிறார்கள். போராடுவதன் மூலம் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பெற்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தவில்லை.