ADVERTISEMENT

பங்குச்சந்தையில் இன்று... எதை வாங்கலாம்? எதை விற்கலாம்?

07:53 AM Jul 08, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாயன்றும் (ஜூலை 7) தொடர்ச்சியாக ஆறாம் நாளாக களைகட்டின. நிப்டி ஒரே ஒரு புள்ளியில் அதன் புதிய அடையாளத்தைத் தொடாமல் 10799.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்திருந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 187.24 புள்ளிகள் ஏற்றத்துடன் 36674.52 புள்ளிகளுடன் அமர்க்களமாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ADVERTISEMENT

நிப்டியில் ஏற்ற, இறக்கம்:

தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் பஜாஜ் பைனான்ஸ் (7.76%), இண்டஸ் இந்த் (5.86%), பஜாஜ் பைனான்சியல் சர்வீஸ் (4.47%), ஐஷர் மோட்டார்ஸ் (3.89%), ஐசிஐசிஐ வங்கி (3.52%) ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் அளித்தன.

அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், கிராசிம், பிபிசிஎல், ஐடிசி ஆகிய பங்குகள் வீழ்ச்சி கண்டன. நிப்டியில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கித்துறை பங்குகள், ஆட்டோமொபைல், நிதிச்சேவைகள், ஐ.டி., ஊடகம் ஆகிய துறைகளின் பங்குகள் கணிசமான ஏற்றம் கண்டிருந்தன.

சென்செக்ஸ் நிலவரம்:

தேசிய பங்குச்சந்தையில் பல ஸ்மால் கேப், மிட்கேப் பங்குகள் எதிர்பாராத லாபத்தை அள்ளி வழங்கின. அதன்படி மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ், குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ், ரெயின், பாஷ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா பைனான்சியல், ஈக்விடாஸ், பந்தன் வங்கி, ஸ்பிக், டெரா சாப்ட்வேர் உள்ளிட்ட பல பங்குகள் சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேல் ஆதாயம் அளித்தன. சென்செக்ஸ் 30 இல் உள்ள நிறுவனங்களின் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் சற்று சரிவையும் சந்தித்தன.

11,000 புள்ளிகளை நோக்கி:

பல ஹெவிவெயிட் கவுண்டர்களில் பங்குகளின் விலை சரியும்போது முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டு பங்குகளை வாங்கியதால் சந்தை போக்கு சாதகமான நிலையில் இருக்கிறது. நிப்டியின் குறியீடு 11000 புள்ளிகளை நோக்கி நகர்வதற்கு அதன் ஆதரவு மட்டம் 10650 புள்ளிகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். அதேநேரம், சரிவை நோக்கிச் செல்லும்பட்சத்தில் 10550 மற்றும் 10450 புள்ளிகள் வரை வர்த்தகம் நடைபெறலாம் எனக் கணித்துள்ளனர் சந்தை ஆய்வாளர்கள்.

''நிப்டியின் போக்கு மேலும் மேலே செல்லும்போது 10887 அளவை எட்டக்கூடும். இது கடந்த 200 நாள் வர்த்தக அளவைக் காட்டிலும் நல்ல நிலைதான். எனினும், குறியீட்டெண் ஆதரவு மட்டம் 10690 புள்ளிகளுக்குக் கீழே இறங்கினால் தேசிய பங்குச்சந்தையில் பலவீனம் உண்டாகும்,'' என்கிறார் ஹெச்டிஎப்சி செக்யூரிட்டிஸின் தீபக் ஜசானி.

நிப்டியின் இப்போதைய வர்த்தக நிலை, கடந்த 50 நாள்களின் சராசரியைக் காட்டிலும் அதிகம். இச்சந்தையின் போக்கு மேலும் மேலே உயரும் என்கிறார் சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் சுமித் பகாடியா.

நிப்டியில் குறியீடு இன்று (ஜூலை 8) 10850 & 10900 என்ற அளவில் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை, சந்தையில் சரிவு ஏற்பட்டால் 10570 புள்ளிகள் வரை வீழ்ச்சி காணப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.

அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச்சந்தைகள் மட்டுமின்றி ஆசிய பங்குச்சந்தைகளும் நேற்று கணிசமாக ஏற்றத்துடன் வர்த்தகம் நடந்தது. அதனாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஓரளவு உயர்வு கண்டன.

ஆதாயம் தரும் பங்குகள்:

சந்தைப் போக்கின் அடிப்படையில் பின்வரும் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் அளிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. டாடா மோட்டார்ஸ், என்பிசிசி (இண்டியா), ராஷ்டிரிய கெமிக்கல்ஸ், எம்டிஎன்எல், ரெயின் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், டின் பிளேட், ஜேகே டயர் அண்டு இண்டஸ்ட்ரீஸ், ஸ்பிக், சிட்டி யூனியன் வங்கி, மங்களூர் கெமிக்கல்ஸ், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், வோல்டாஸ், ஹேவல்ஸ் இண்டியா ஆகிய பங்குகளிள் முதலீடு செய்யலாம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.

ஆர்வம் உள்ள பங்குகள்:

எஸ்கார்ட்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், வைபவ் குளோபல், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், நவீன் புளூரைன் ஆகிய பங்குகள் எதிர்காலத்தில் அதிக ஆதாயம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடம் நிலவுகிறது.

அதேநேரம், பிசி பவர் கண்ட்ரோல்ஸ், டச்வுட் என்டர்டெயின்மென்ட், மிட்டல் லைப் ஸ்டைல் மற்றும் ஓமாக்ஸ் ஆகிய பங்குகளை விற்று விடலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

இன்று முடிவு வெளியாகும் பங்குகள்:

சவுத் இந்தியன் வங்கி, ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்க்ஸ், டிஷ் டிவி இண்டியா, கொகுயா கேம்லின், புரோசன் இன்டூ பிராப்பர்டீஸ், மாதவ் காப்பரேஷன், ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி - மார்ச் காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்கின்றன. இதன் லாப-நட்டங்களைப் பொருத்து இப்பங்குகள் இன்று சந்தையில் முக்கியத்துவம் பெறும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT