Skip to main content

பங்குச்சந்தை: நாலு கால் பாய்ச்சலில் நிப்டி! முதலீட்டாளர்கள் குஷி!!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020


 

share market nifty and sensex

 

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக செவ்வாய் கிழமையும் (ஜூன் 23) ஏறுமுகத்தில் இருந்தன. 

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டியில், நேற்றைய வர்த்தகம் 10471 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது, முந்தைய நாளைக் காட்டிலும் 159.80 புள்ளிகள் (1.55%) உயர்வு. வர்த்தகத்தின் துவக்கமே 10347 புள்ளிகளில் அமர்க்களமாக இருந்தது. வர்த்தகத்தின் இடையே இண்டெக்ஸ் அதிகபட்சமாக 10484 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 10301.75 புள்ளிகளுக்கும் சென்றது. நிப்டியில் பட்டியலிடப்பட்டு உள்ள 50 நிறுவனங்களில் 46 பங்குகள் விலையேற்றத்திலும், 4 பங்குகள் விலை சரிந்தும் வர்த்தகம் ஆகின. 

 

ஏற்றம்- இறக்கம்:

தேசிய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ் 9.28 சதவீதம் விலை ஏறியது. லார்சன் அன்டு டூப்ரோ 6.73 சதவீதம், இண்டஸ் இந்த் வங்கி 6.53 சதவீதம், என்டிபிசி 5.77 சதவீதம், ஹிண்டால்கோ 5.43 சதவீதம் ஏற்றம் கண்டன. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த ரிலையன்ஸ் பங்குகள் நேற்று 1.40 சதவீதம் சரிவு கண்டது. பார்தி ஏர்டெல் 0.63 சதவீதம், வேதாந்தா 0.14 சதவீதம், மாருதி 0.10 சதவீதம் என சற்றே சரிவடைந்தன.

 

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால் நிப்டியில் நேற்று வர்த்தகமான 1939 பங்குகளில் 1374 பங்குகளின் மதிப்பு ஏற்றத்திலும், 509 பங்குகள் சரிவிலும், 56 பங்குகளின் விலைகள் மாற்றமின்றியும் வர்த்தகம் ஆகின. ஆட்டோமொபைல், எனர்ஜி, நிதி சேவைகள், எம்எம்சிஜி துறைகள், ஐ.டி., ஊடகம், உலோகம், பார்மா, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் துறைகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயத்தை அளித்தன.
 

share market nifty and sensex

 

சென்செக்ஸ் நிலவரம்:

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், செவ்வாயன்று 34911.32 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ், நேற்று காலை 35015 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 35482 புள்ளிகள் வரை உயர்ந்தது. குறைந்தபட்சமாக 34843 புள்ளிகளுக்கும் சென்றது. இறுதியில் 35430 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிவடைந்தது. சென்செக்ஸில் உள்ள 30 பங்குகளில் 27 பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்து, முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்தது. 3 பங்குகள் மட்டும் லேசான வீழ்ச்சி கண்டன. 

 

பிஎஸ்இ சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 2876 பங்குகளில் 1939 பங்குகள் விலையேற்றத்திலும், 777 பங்குகள் விலை சரிந்தும் வர்த்தகம் ஆகின. 160 பங்குகளின் விலை நிலவரத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதேநேரம், 133 பங்குகள் கடந்த 52 வார உச்சத்தைத் தொட்டு, வர்த்தகம் ஆனது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

அமெரிக்க சந்தை ஏற்றம்: 

கரோனா அபாயத்தால் லேசான சரிவில் இருந்த அமெரிக்க பங்குச்சந்தைகள் நேற்று 0.59 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. அதேநேரம், லண்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய சந்தைகள் லேசான சரிவை சந்தித்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் சீனா ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவு கண்டன.

 

share market nifty and sensex

 

10600 புள்ளிகளை நோக்கி நிப்டி:

 

தேசிய பங்குச்சந்தையைப் பொருத்தமட்டில் இப்போதைய ஏற்றமான நிலை தொடர்ந்தால், புதன்கிழமை (ஜூன் 24) வர்த்தகத்தின்போதே 10,600 புள்ளிகள் என்ற இன்னொரு உச்சத்தை நெருங்கும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை, சந்தை இறக்கத்தைச் சந்தித்தால் 10,300 புள்ளிகள் வரை கீழே இறங்கலாம் என்கிறார்கள்.

 

''நிப்டி, அடுத்து வரும் சில நாள்களில் சரிவு கண்டாலும் கூட 10,333 புள்ளிகளுக்கு மேல்தான் வர்த்தக செயல்பாடுகள் இருக்கும். கடந்த நான்கு நாள்களின் ஏற்றம் இன்றும் தொடரும் நிலையில், 10,600 முதல் 10,650 புள்ளிகள் வரையிலும் கூட ஏற்றம் காண வாய்ப்புகள் உள்ளன,'' என்கிறார் மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை நிபுணர் சந்தன் தபாரியா.

 

ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நாகராஜ் ஷெட்டி, ''நிப்டியில் கடந்த சில நாள்களாக தென்படும் நேர்மறையான வளர்ச்சி தொடரும் பட்சத்தில், இண்டெக்ஸ் புதிய உச்சத்தைத் தொடவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த ஓரிரு நாள்களில் நிப்டி 10600 - 10650 புள்ளிகள் வரை உயரக்கூடும். இக்குறுகிய கால வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்கும் பெரிய அளவில் ஆதாயம் அளிக்கும்,'' என்கிறார்.

 

கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலையால் அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவில் இருந்த நிலையில், செவ்வாயன்று மீட்சி கண்டிருப்பது, அந்த நாடு பொருளாதார இழப்பில் இருந்தும் மீளும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அதன் தாக்கமும் இந்திய பங்குச்சந்தைகளில் நேர்மறையான விளைவுகளை உண்டாக்கும் எனத் தெரிகிறது.

 

share market nifty and sensex

 

காளையின் ஆதிக்கத்தில் உள்ள பங்குகள்:

செவ்வாயன்று தேசிய பங்குச்சந்தைகளில் பின்வரும் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயத்தை அளித்தன. அப்பங்குகள் தொடர்ந்து விலையேற்றத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதன்படி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இண்டியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ், சீக்வென்ட் சயின்டிபிக், பிர்லா சாப்ட், கேஸ்ட்ரால் இண்டியா, டாடா ஸ்டீல் பிஎஸ்எல், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட், இன்ஜினீயர்ஸ் இண்டியா, செண்ட்ரல் டெபாசிட்டரி, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், ஹைகல், இண்டர்குலோப் ஏவியேஷன், தீபக் நைட்ரேட், வெல்ஸ்பன் இண்டியா, ஆஸ்டெக் லைஸ் சயின்ஸ், தி ராம்கோ சிமெண்ட்ஸ், ஐநாக்ஸ் லெய்சர் அண்டு ஆப்டெக் ஆகிய பங்குகள் ஏற்றம் காணும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டும் பங்குகள்:

சுவென் பார்மா, டிக்ஸான் டெக்னாலஜீஸ் (இண்டியா), எப்டிசி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், சின்ஜின் இண்டர்நேஷனல் ஆகிய பங்குகளின் காலாண்டு முடிவுகள் ஸ்திரமாக இருப்பதால், ஆதாய நோக்கில் அதிகளவில் முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 

கல்வான் எல்லையில் இந்தியா - சீனா நாடுகள் குவித்து வந்த படைகளை இரு தரப்புமே திரும்பப் பெற முடிவு எடுத்ததும், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் அதிகமானோர் குணமடைந்து வருவதும் இந்திய பங்குச்சந்தைகளில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் சந்தையில் இன்றும் ஏற்றம் இருக்கும் என திடமாக நம்புகிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள். 

 

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.