இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளைக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட தற்போது அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுஹாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில், அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் ராகுல் காந்தியின் யாத்திரை இன்று (24-01-24) நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வழக்குகளை போட்டு என்னை மிரட்டலாம் என்ற எண்ணம் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. உங்களால் முடிந்த அளவு வழக்குகளை பதிவு செய்யுங்கள். நான் பயப்பட மாட்டேன். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஒரு போதும் என்னை மிரட்ட முடியாது.
ஹிமந்த பிஸ்வா சர்மா தினமும் தனது இதயத்தில் வெறுப்புடன் எழுகிறார். அவர் 24 மணி நேரமும், வெறுப்பையும், பயத்தையும் கொண்டிருக்கிறார். நமது சண்டை அவருக்கு எதிரானது அல்ல. ஆனால், அவரது இதயத்தில் உள்ள வெறுப்புக்கு எதிரானது. பயம், வெறுப்பின் பின்னால் மறைந்து கொள்கிறது. அவர்கள் வெறுப்பையும், பயத்தையும் பரப்புகிறார்கள். நாங்கள் அன்பை பரப்புகிறோம்” என்று கூறினார்.