Skip to main content

3,750 கி.மீ. கட்டுப்படாத ராகுல் கால்கள்! 543ஐ கைப்பற்றுமா காங்கிரஸ்!

Published on 30/01/2023 | Edited on 15/11/2023

 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமை பயணம்' ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து நிறைவடைந்துள்ள இந்த பெரும்பயணம் இந்திய அரசியலின் புதிய தொடக்கப்புள்ளியாக அமையுமா?
 

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

இந்திய ஒற்றுமை பயணம் அறிவிப்பு:

மார்ச் 2022ல் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாபைத் தவிர்த்து 4 மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. இந்த ஐந்து மாநில தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸ், 2022ம் ஆண்டு மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் உதய்பூரில் நடந்த ‘சிந்தனை அமர்வு’ என்ற மாநாட்டின் வாயிலாக ‘நாங்கள் வீழ்ந்திருக்கிறோம். ஆனால், எழுந்து வருவோம்’ எனச் சூளுரைத்தது. ராகுல் காந்தியின் தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் (Bharat Jodo Yatra) நடைபெறும் என அப்போதைய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

இந்திய ஒற்றுமை பயணம் நோக்கம்:

"இந்தியாவில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணம்தான் இந்த நடைப்பயணம்" என்றார் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ்

 

நடைப்பயணத் தொடக்கம் மற்றும் கடந்து வந்த பாதைகள்:

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

2022 செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில், ராகுல் காந்தியிடம் தேசியக்கொடியைக் கொடுத்து இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் மிகப்பழமையான கட்சி நாட்டை அடக்குமுறையிலிருந்து விடுவிக்கும் கடினமான பணியில் இறங்கியிருக்கிறது. நம்முடைய மகத்தான குடியரசுக்கு புத்துயிர் கொடுக்கும் லட்சியத்தில் இந்த யாத்திரை வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்றார். கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வழியாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த நடைப்பயணம் நிறைவடைந்துள்ளது.

 

நடைப்பயணத்தின்போது நடந்த தேர்தல்கள்:

இந்த நடைப்பயணம் நடந்து கொண்டிருந்த போதுதான் 2022 அக்டோபரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற்றது. “தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை” என முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தினர் அறிவித்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே - சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளுடன் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் மல்லிகார்ஜுன கார்கே.

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

2022 டிசம்பரில் குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து முடிந்தன. குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத வெற்றியை பா.ஜ.க. பெற்றிருந்தாலும், 68 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சலப்பிரதேசத்தில் 40 இடங்களில் வெற்றி பெற்று, அங்கு பா.ஜ.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது காங்கிரஸ். இந்த வெற்றி 2024ம் ஆண்டு தேசம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி பார்வை கொண்டோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது எனப் பேசப்பட்டது. 

 

இந்திய ஒற்றுமை பயணத்தின் மீதான விமர்சனங்கள்:

இந்த நடைப்பயணத்தால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருந்த பா.ஜ.க., அடுத்தடுத்து விமர்சனங்களை வீச ஆரம்பித்தது. ராகுல் காந்தியை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறிய பா.ஜ.க,. அவருடைய ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு பேட்டிக்கும் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தது. பிரதமர் மோடி குஜராத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோதும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தார்.

 

ராகுலுடன் கைகோர்த்த ஆளுமைகள்:

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

இந்த நடைப்பயணத்தில் மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், RAW உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலத், ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட பெரும் ஆளுமைகள், சாதாரண மக்கள், பல சாதனையாளர்கள், குழந்தைகள், பெரியவர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொருளாதார வல்லுநர்கள் எனப் பெரும் கூட்டம் ராகுலுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்தது.

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

இந்த நடைப்பயணத்தின்போது 13 முறை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, பாஜ.க. - ஆர்.எஸ்.எஸ். தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “பாஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வெறுப்புணர்வைப் பரப்புகிறார்கள்; அவர்களின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பதுதான். அவர்களின் திட்டங்களைச் செயல்படுத்த ஒரு போதும் விடமாட்டோம்” என டெல்லியின் எல்லையில் பேசினார் ராகுல்.

 

நடைப்பயணம் சந்தித்த சிக்கல்கள்:

2022 டிசம்பர் மாதத்தில் மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. கெடுபிடிகளை அடிதடியாக ஒன்றிய அரசு அறிவித்தது.  இந்திய ஒற்றுமை பயணம் 100 நாட்களைக் கடந்து ராஜஸ்தானில் நடைபெற்று வந்த நிலையில், "பாரத் ஜோடோ யாத்திரையின் போது முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதிப்பது என கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள். அப்படி இல்லை என்றால், தேசத்தின் நலன் கருதி யாத்திரையைக் கைவிடுங்கள்" என ராகுல் காந்திக்கும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. "இது தேசநலன் என்பதைக் கடந்து நடைப்பயணத்தை முடக்கும் யோசனை" என  ராகுல் காந்தி விமர்சித்தார். 

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

கடந்த ஜனவரி 27ம் தேதி நடைப்பயணம் காஷ்மீரின் காசிகண்ட் பகுதியில் நுழைந்தபோது பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே இருக்க வேண்டிய காஷ்மீர் காவல்துறை திடீரென மாயமானதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காஷ்மீர் காவல்துறை தவறிவிட்டதாகவும், காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை அடுக்கியது. “கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், நடைப்பயணத்தைத் தொடர வேண்டாம்” என ராகுல் காந்தியின் பாதுகாப்புக்குழு அறிவுறுத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய ஒற்றுமை பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “இதற்கு நான் சாட்சி. ராகுல் காந்தி நடக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை பராமரிப்பிலிருந்த பாதுகாப்பு வளையத்தின் வெளிப்பகுதியிலிருந்த காவல்துறையினர் திடீரென காணாமல் போயினர். நாங்கள் ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு வந்திருந்தோம். மேலும் 11 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொள்வதாக இருந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது ரத்து செய்யப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளானது. 

 

இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம் வெற்றி பெறுமா?

2022ம் ஆண்டு செப். 7ம் தேதி துவங்கி, 2023ம் ஆண்டு ஜன. 30ம் தேதி காந்தியின் நினைவு நாளில் காஷ்மீரில் தனது 3,750 கி.மீ நடைப்பயணத்தை முடித்துள்ளார் ராகுல் காந்தி.

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் மே தொடக்கத்தில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் நடைப்பயணத்தின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயணம் உணர்த்திய கள எதார்த்தங்களை காங்கிரஸ் ஆய்வுக்கு உட்படுத்தி, 2024ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அவர்கள் வகுக்கும் வியூகமே இந்தியாவின் எதிர்காலத்தையும் காங்கிரஸின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க இருக்கிறது.

 

- தி.மு. அபுதாகிர்

 

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.