பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் வந்த ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கொண்ட யாத்திரையின் போது, நாய் சாப்பிட மறுத்த பிஸ்கெட்டை தனது ஆதரவாளருக்கு ராகுல் காந்தி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அந்த வீடியோவில், ‘ராகுல் காந்தி தனது திறந்தவெளி வாகனத்தில் வளர்ப்பு நாய் ஒன்றுடன் அமர்ந்திருக்கிறார். அப்போது, அந்த நாய்க்கு பிஸ்கெட் கொடுப்பதற்காக அருகில் உதவியாளரிடம் பிஸ்கெட் பாக்கெட்டை கேட்கிறார். அதன்படி, அந்த நாய்க்கு பிஸ்கெட் ஊட்டியபடி தனது ஆதரவாளர்களுடன் பேசுகிறார். அப்போது, நாய் பிஸ்கெட் ஒன்றை சாப்பிட மறுக்க, அதனை உடனடியாக ராகுல் காந்தி தனது ஆதரவாளருக்கு கொடுக்கிறார்’. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. மேலும் பா.ஜ.க.வினர் பலரும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி ஜார்க்கண்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், நாய்க்கு கொடுத்த பிஸ்கெட்டை வேறு ஒரு நபருக்கு கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “யாத்திரையின் போது அங்கிருந்த நாயையும் அதன் உரிமையாளரையும் அழைத்தேன். நாய் பதற்றமாகவும், நடுக்கமாகவும் இருந்தது. அதற்கு நான் உணவளிக்க முயன்றபோது நாய் பயந்து போனது.
அதனால், நாயின் உரிமையாளரிடம் பிஸ்கெட்டை கொடுத்தேன். அந்த நாய் அவர் கையில் இருந்த பிஸ்கெட்டை சாப்பிட்டது. இதில் என்ன பிரச்சனை என்று எனக்குப் புரியவில்லை” என்று கூறினார். அப்போது, அந்த நபர் காங்கிரஸ்காரர் என்று பா.ஜ.க. வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இல்லை. அவர் காங்கிரஸ்காரர் இல்லை. நாய்கள் மீது பா.ஜ.க வைத்திருக்கும் மோகம் எனக்கு புரியவில்லை” என்று கூறினார்.