தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பெரியாரின் பிறந்தநாளான இன்று சமூகநீதி நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெரியார் பிறந்தநாளையொட்டி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'எந்த ஒரு கருத்தையும் மறுக்க எவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு கருத்தைச் சொல்லக்கூடாது எனத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை" என்ற பெரியாரின் வாசகத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "சுதந்திரம், தைரியம், சமத்துவம்.. தலைசிறந்தவரான பெரியாரை அவரது பிறந்தநாளில் நினைவுகூருகிறேன்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயன், பெரியார் பிறந்தநாளையொட்டி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாகத் தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்" எனக் கூறியுள்ளார்.