வரலாறு காணாத கனமழையை சந்தித்தது கேரளா. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் பல மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 7 லட்சம் பேர் நிவாரணமுகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த வருடம் களையிழந்து காணப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மக்களுக்கு ஓணம் பண்டிகையான இன்று தெரிவித்துள்ளதாவது. "கேரளா தன்னுடைய இக்கட்டான காலகட்டத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்களிலும் வீடுகளிலும் இருக்கின்ற மக்கள் தங்களுடைய அன்பானவர்களுக்காக வருந்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஓணம் பண்டிகையில் ஒரு சபதத்தை எடுத்துக்கொள்வோம், வேற்றுமையை தூரம் அகற்றிவிட்டு, ஒற்றுமையுடன் கேரளாவை மீண்டும் கட்டமைப்போம்" என்று ராகுல்காந்தி இந்த ஓணம் பண்டிகை முன்னிட்டு கேரள மக்களுக்கு ட்விட்டரில் அறிவுருத்தியுளளார்.