3- ஆவது நாளாக தொடர்ந்துள்ள வவுச்சர் ஊழியர்களின் போராட்டத்தில் புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் நிர்வாகிகள் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவளித்து பேசினார்கள். போராட்டத்தில் இரா. சிவா எம்.எல்.ஏ பேசியதாவது :
ஒரு அரசாங்கம் அரசுத்துறைகளில் வைக்கப்படும் ஆட்களை அடுத்துவருகின்ற அரசுகள் சுயநலத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக அந்த ஆட்களை வெளியேற்றிவிடுவார்கள். ஆனால் ஆட்களை வேலைக்கு வைத்த அரசாங்கமே அவர்களைப்பற்றி கவலைப்படாமல் உள்ளது இங்குதான். இந்த விசித்திரமெல்லாம் புதுச்சேரியில் தான் அரங்கேறும். இந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றுகின்ற வகையில் இந்த அரசும், ஆட்சியாளர்களும் முயற்சி மேற்கொள்கிறார்களா என்றால் இல்லை. இன்னும் ஆயிரம் பேரை காவு வாங்கும் வேலையில் தான் அவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். சிறப்புக்கூறு நிதியிலிருந்தாவது ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அப்படி செய்ய இந்த அரசுக்கு எண்ணமில்லை. இந்த போராட்டம் தொடர்ந்தால் குடிதண்ணீர் விடுவதற்குக்கூட ஆளில்லாமல் புதுச்சேரி நாறிவிடும் சூழல் உள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குறைந்தபட்ச கூலி நிர்ணயச்சட்டத்தை அமல்படுத்தாத துறையாக புதுச்சேரி தொழிலாளர் துறை செயல்படுகிறது. புதுச்சேரி அரசுத்துறைகளில் மோசமான துறையாக தொழிலாளர் துறை உள்ளது. துறைதான் இப்படி என்றால் அந்த துறையின் அமைச்சரோ பல அரசு சார்பு நிறுவனங்களுக்கு மூடுவிழா கண்டவராக இருக்கிறார். ஸ்பின்கோ, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடிய பெருமை அவரையேச்சாரும். இது புதுச்சேரி மக்களின் சாபக்கேடு. ஒரு தனி மனிதனின் கஷ்டத்தை உணருகின்றவர்கள் அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் தங்களுக்காக உழைத்தவர்ளை இப்படி அல்லல்பட வைப்பார்களா? இந்தியாவில் எந்த மாநிலத்தையும் விட அரசு வேலை என்றால் முகம் சுளிக்கும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது.