கடந்த 50வருடங்களில் வரலாறு காணாத மழையை சந்தித்தது கேரளா. இதனால், 14 மாவட்டங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்திருக்கிறது. அத்துடன் மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் வரலாறு காணாத பேரழிவை மாநிலம் சந்தித்து வருகிறது. இதுவரை 8000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது என்று கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பேரிடர் மீட்புக்குழுவும் மத்திய அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
தற்போது இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது”தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இருவரும் வெள்ள நிலவரம் குறித்து உரையாடினோம். வெள்ளத்தால் சூழப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து கலந்தாலோசித்தோம். வெள்ளம் காரணமாக அங்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான சூழ்நிலையை காண இன்று மாலை கேரளா செல்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.