Skip to main content

அரபு நிதியை மத்திய அரசு ஏன் நிராகரிக்கிறது?

Published on 23/08/2018 | Edited on 23/08/2018

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேய்மழை பெய்திருக்கிறது கடவுளின் தேசமான கேரளாவில். காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடக்கும் மீட்புப் பணிகளே, நம்மைப் பதைபதைக்கச் செய்ய போதுமானதாக இருக்கின்றன. தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பொழிந்ததும், அதனால் அணைகள் அனைத்தும் நிரம்பியதும்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்குமான காரணமாக சொல்லப்படுகிறது.

 

kerala


 

 

மழை நிற்கட்டும் என்று காத்திருந்தவர்கள், வெள்ளம் வடிவதற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. வெள்ளம் வடிந்த பின்னர்தான் புதிய பிரச்சனைகள் அந்த மக்களுக்காக காத்திருந்தன. வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நானூறைத் தாண்டிவிட்டது. ஏராளமான வனவிலங்குகளும் செத்து மிதக்கின்றன. போதாக்குறைக்கு பல கோடிகளுக்கு பொருட்சேதமும் அடைந்திருப்பது கேரள மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. மழையால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மீண்டுவர, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிவாரணம் தேவைப்படும் என கேரள அரசு கணக்குக் காட்டுகிறது. 

முதலில் உள்துறை அமைச்சகம் 100 கோடியும், பின்னர் பிரதமர் மோடி பார்வையிட்ட பின் 500 கோடியும் ஒதுக்கி நிவாரணத்தை அறிவித்தனர். அதிதீவிர தேசியப் பேரிடர் என்று அறிவித்த பின்னரும், மிகச்சிறிய நிவாரணத்தோடு வாயை மூடிவிட்டது மத்திய அரசு. சென்னை பெருமழையின்போது சாதி, மத பேதங்களைக் கடந்து படர்ந்த நேசக்கரங்கள்தான், கேரளாவையும் துயரிலிருந்து தற்காலிகமாக தூக்கிவிட்டிருக்கின்றன. ஒருவர் துவண்டு நிற்கும்போது தோள் கொடுத்து தூக்கிவிடும் மனிதநேயம், ஒரு மாநிலமே எழுந்துநிற்க உதவிக்கொண்டிருக்கிறது.

 

 

இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான நிவாரண நிதி கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு நாடுகள், கட்டார், மாலத்தீவுகள், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும், நல்லெண்ண அடிப்படையில் மனமுவந்து உதவ முன்வந்துள்ளன. ஆனால், இந்த உதவியை ஏற்பதில் கொள்கை சிக்கல் இருப்பதாக முட்டுக்கட்டை போடுகிறது மத்திய அரசு. இதனை உறுதிசெய்யும் விதமாக தாய்லாந்து அரசின் தரப்பு, “இந்திய அரசு எங்கள் நிதியுதவியை ஏற்க மறுக்கிறது” என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது. 

 

Modi


 

 

14 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசு, வெளிநாடுகளிடம் இருந்து நிவாரண நிதி பெறுவதில் கொள்கை அளவில் மாற்றம் கொண்டுவந்ததைக் காரணமாக சொல்கிறது தற்போதைய மத்திய அரசு. 1991ல் ஏற்பட்ட உத்தர்காசி நிலநடுக்கம், 1993 லத்தூர் நிலநடுக்கம், 2001 குஜராத் நிலநடுக்கம், 2002 பெங்கால் புயல், 2004 பீகார் பெருவெள்ளம் என பல சூழல்களில், பல்வேறு இயற்கைப் பேரிடர் சமயங்களில் உலக நாடுகள் இந்தியாவிற்கு நிவாரண உதவிகளைத் தந்திருக்கின்றன. ஆனால், 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது, உலகநாடுகளின் நிவாரண உதவியை மன்மோகன் அரசு ஏற்க மறுத்தது. அது இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு பொருளாதார இழுக்கு ஏற்படும் என்பதால், சொந்தமாகவே சரிசெய்து கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
 

 

 

2013-ஆம் ஆண்டு உத்தர்காண்ட் நிலச்சரிவு ஏற்பட்டபோதுகூட, அமெரிக்கா 90 லட்ச ரூபாய் இழப்பீடு தருவதாக சொன்னபோது, அதை இந்திய அரசு ஏற்கவில்லை. மாறாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இதற்குத் தேவையான தொகையை உலக வங்கி அல்லது ஏசியன் வங்கியில் இருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தார். உலக நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது மனமுவந்து உதவ நினைப்பவர்கள், என்.ஜி.ஓ.க்களின் மூலமாக உதவலாம் என்றாலும், பிற நாட்டு அரசுகளிடம் இருந்து வரும் உதவியை இந்தக் கொள்கை முடிவு நிராகரிக்கவே செய்கிறது.

ஆனால், 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை, மேற்சொன்னவற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன்படி, தேவைப்பட்டால், உலக நாடுகளிடம் இருந்து நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்ளலாம் என அதில் சொல்லப்பட்டது. இதையே கேரள முதல்வர் பினராயி விஜயனும் குறிப்பிட்டு, உரிய சமயத்தில் நிவாரணம் கிடைக்க வழிசெய்யவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். 

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவுக்கு ஐக்கிய அரபு நாடுகள் தர முன்வந்த 700 கோடி ரூபாயைக் கொள்கைக் காரணங்களால் ஒருவேளை மத்திய அரசு நிராகரித்தால், அந்தத் தொகையை மத்திய அரசே தரவேண்டும்” என பதிவிட்டுள்ளார். 
மிகப்பெரிய துயரில் சிக்கிக் கொண்டிருக்கும் கேரளாவிற்கு, எந்தவொரு சின்ன உதவியும் முக்கியத்துவமானது. அரசியல் உள்நோக்கங்களைத் தவிர்த்து, உரிய வகையில் இழப்பீடு கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்பது அழுத்தமான வேண்டுகோளாக இருக்கிறது.   
 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.