டெல்லியிலிருந்து போபால் செல்லும் தனியார் விமானத்தில் ஏறிய பிரக்யா தாகூர், தான் முன்பதிவு செய்த இருக்கை தனக்கு வழங்கப்படவில்லை என விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை மற்றும் முதல் வகுப்பு வசதி ஆகியவை தரப்படவில்லை என அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பயணிகளும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், "நீங்கள் மக்கள் பிரதிநிதி. உங்கள் பணி எங்களைத் தொந்தரவு செய்வதில்லை. உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால் அடுத்த விமானத்தில் வாருங்கள்" என்று ஒரு பயணி கூறுகிறார். மற்றொரு பயணி, "முதல் வகுப்பு உங்கள் உரிமை இல்லை. இங்குள்ள ஒரு பயணி தொந்தரவுக்கு உள்ளானாலும் அதற்கு நீங்களே பொறுப்பு. 50 பயணிகளின் நேரத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? " என கேட்டார். இதனை கடுமையாக கண்டித்த பிரக்யா, இது தொடர்பாக போபால் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.